Asianet News TamilAsianet News Tamil

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் காலமானார்

பதவிக்காலம் முடிந்தபின் அரசியலில் இணைந்த முதல் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் தான். காங்கிரஸ் உறுப்பினராக மாநிலங்களவை உறுப்பினரார்.

Former Election Body Chief And Congress Leader MS Gill Dies At 86 sgb
Author
First Published Oct 16, 2023, 8:48 AM IST

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் மனோகர் சிங் கில் உடல்நலக்குறைவு காரணமாக தெற்கு டெல்லி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். 86 வயதான அவர் உயர்மட்ட அதிகாரப் பதவிகளிலும் மத்திய அமைச்சரவையிலும் பங்காற்றி இருக்கிறார்.

ஷிரோமணி அகாலிதளத்தின் பிரகாஷ் சிங் பாதல் பஞ்சாப் முதலமைச்சராக இருந்தபோது இளம் அதிகாரியாக பணியாற்றியவர் எம்.எஸ்.கில். முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான அவர் டிசம்பர் 1996 முதல் ஜூன் 2001 வரை தலைமை தேர்தல் ஆணையராக (CEC) பணியாற்றினார்.

டிஎன் சேஷன் தேர்தல் குழுவின் தலைவராக இருந்தபோது கில் மற்றும் ஜிவிஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அப்போதுதான் தேர்தல் குழு பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக மாறியது.

பதவிக்காலம் முடிந்தபின் அரசியலில் இணைந்த முதல் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் தான். காங்கிரஸ் உறுப்பினராக மாநிலங்களவை உறுப்பினரான கில், 2008 இல் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார்.

இந்தியத் தேர்தல் ஆணையம் அதன் 11வது தலைமைத் தேர்தல் ஆணையரான மனோகர் சிங் கில் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. "1958ஆம் ஆண்டு ஐஏஎஸ் பஞ்சாப் கேடரின் சிறந்த அதிகாரி" என்றும் பாராட்டியுள்ளது.

"அவர் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தபோது, ​​தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக 1998 இல் 12வது மக்களவைத் தேர்தலையும், 1999 இல் 13வது மக்களவைத் தேர்தலையும் நடந்தியது. 11வது குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் 1997ல் துணை ஜனாதிபதி தேர்தலையும் நடத்தியுள்ளது. 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கு பொதுத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறது" என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

எம்.எஸ். கில் தனது மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் வசித்துவந்தார். திங்கள்கிழமை அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios