நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் குற்றவாளி - சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
நிலக்கரி ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் மதுகோடா குற்றவாளி என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதற்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று முதலமைச்சர் ஆனவர் மதுகோடா. அவர் கடந்த 2006 செப்டம்பர் முதல் 2008 ஆகஸ்ட் வரை ஜார்க்கண்ட் முதலமைச்சராக பணியாற்றினார்.
நிலக்கரி ஊழல்
அவரது ஆட்சிக்காலத்தில் அவர் தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி அம்மாநில நிலக்கரி சுரங்கங்களை மேற்குவங்கத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு மலிவு விலையில் ஒதுக்கீடு செய்ததாக புகார் எழுந்தது.
இந்த முறைகேடு விவகாரத்தை சி.பி.ஐ., விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கை விசாரித்த சி.பி.,ஐ. , மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச். சி.குப்தா, ஜார்க்கண்ட் முன்னாள் தலைமைச்செயலர் ஏ.கே. பாசு உள்ளிட்ட 15 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
மதுகோடா குற்றவாளி
இந்த வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சாட்சியங்களிடம் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச். சி.குப்தா உட்பட 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்புஅளித்துள்ளது.
இந்த வழக்கில் 4 பேரை குற்றமற்றவர்கள் என அறிவித்து அவர்களை விடுவிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதில் முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு , அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.