நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை நோக்கி விவசாய அமைப்புகள் இன்று பேரணி; ஏன்? எதற்காக?
மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், இன்று நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைக்கு விவசாயிகள் சங்கங்கள் பேரணி நடத்தவுள்ளன.
பல்வேறு வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தும் வகையில் இந்த நடைபயணங்கள் நடைபெறும் என விவசாயிகள் சங்கத் தலைவர்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்து இருந்தனர்.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) வழங்குவது குறித்து விவாதம் நடத்தி சட்டம் கொண்டு வரப்படும் என அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், மூன்று விவசாயச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஒரு ஆண்டுக்கும் மேலாக தேசிய தலைநகர எல்லைகளில் போராட்டம் நடத்தினர். சில இடங்களில் ரயில் சேவை முடங்கின. இதையடுத்து, இந்த மூன்று சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் மாதம் அறிவித்தார். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
26/11 உலகை உலுக்கிய மும்பை தீவிரவாத தாக்குதல்... இன்று 14ம் ஆண்டு நினைவு தினம்.!
“நாங்கள் எழுத்துபூர்வமாக கொடுத்த பல கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டனர். ஆனால் இன்னும் எதையும் நிறைவேற்றவில்லை. விவசாயிகளை ஏமாற்றிய துரோகி என்பதை அரசாங்கம் நிரூபித்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாக்கின்றனர்'' என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) தலைவர் ஹன்னன் மொல்லா தொலைபேசியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்து இருக்கும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த விவசாய சங்கங்களின் அமைப்பான எஸ்.கே.எம்., இயக்கத்தின் எதிர்காலப் போக்கை முடிவு செய்ய டிசம்பர் 8-ம் தேதி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
“விவசாயிகளின் பேச்சைக் கேட்க அரசு தயாராக இல்லை. நாங்கள் மற்றொரு இயக்கத்தைத் தொடங்கி உள்ளோம். நாளை நாடு முழுவதும் பேரணி நடத்துகிறோம். இந்த முறை எங்கள் இயக்கம் டெல்லி மட்டுமல்ல, நாடு முழுவதும் அணிவகுப்பு நடத்துவார்கள். அந்தந்த மாநிலங்களின் ஆளுநர் மாளிகைக்கு விவசாயிகள் பேரணி நடத்தி, ஆளுநரிடம் ஒரு குறிப்பாணை ஒன்றை வழங்குவார்கள்'' என்று மொல்லா தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான குழு முறையாக அமைக்கப்படவில்லை. போராட்டத்தின் போது விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட "பொய்" வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை என்று விவசாயிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இனி மூத்த குடிமக்கள் சீக்கிரம் சாமி தரிசனம் செய்யலாம்… செயல்முறையை எளிதாக்கியது திருமலை திருப்பதி தேவஸ்தானம்!!
கடந்த ஆண்டு நவம்பரில், 3 விவசாய சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் குறித்தும் விவாதிக்க ஒரு குழுவை அமைப்பதாக உறுதியளித்து இருந்தார்.
குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து விவாதிக்க அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் குழுவை எஸ்கேஎம் நிராகரித்தது. இதற்கிடையில், எஸ்கேஎம் (அரசியல் சாராத) உறுப்பினர் அபிமன்யு சிங் கோஹர், விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் மற்றொரு இயக்கம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.