பேஸ்புக்கில் போட்டோ திருட்டு! பிளாக்மெயில் செய்யப்படும் இளம் பெண்கள்! அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்!
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை திருடி ஆபாச வலைதளங்களுக்கு விற்பனை செய்யும் கும்பல், அந்த பெண்களை பிளாக் மெயில் செய்து வருவதும் அம்பலமாகியுள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை திருடி ஆபாச வலைதளங்களுக்கு விற்பனை செய்யும் கும்பல், அந்த பெண்களை பிளாக் மெயில் செய்து வருவதும் அம்பலமாகியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் அந்த இளம் பெண். பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக இருப்பவரின் மனைவி அந்த இளம் பெண். சில நாட்களுக்கு முன்னர் அவரது பேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படம் வந்துள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் அந்த புகைப்படத்தில் இருந்தது அவர் தான். மேலும் அந்த புகைப்படத்திற்கு அருகே என் செல்போன் எண் வேண்டுமா?
உடனே இந்த புகைப்படத்தை லைக் செய்து, ஷேர் செய்தால் என்னுடைய செல்போன் எண் கிடைக்கும் என்று வாசகம் இடம் பெற்று இருந்தது. இதனை பார்த்து பதறிப்போன அந்த பெண் உடனடியாக அந்த விபரீத புகைப்படத்தை ஷேர் செய்திருந்த பேஸ்புக் பக்கத்தின் அட்மினை மெசன்ஜர் ஆப் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது புகைப்படத்தை நீக்க வேண்டும் என்றால் 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று அந்த அட்மின் மிரட்டியுள்ளான். இதனால் பயந்து போன அந்த பெண் நடந்தவற்றை தனது கணவரிடம் கூறியுள்ளார்.
செய்தியாளரான அந்த பெண்ணின் கணவர் உடனடியாக சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து நடந்தவற்றை எடுத்துக் கூறி புகார் அளித்துள்ளார். அப்போது தான் பாதிக்கப்பட்டது தனது மனைவி மட்டும் அல்ல ஏராளமான பெண்களின் புகைப்படத்தை எடுத்து வைத்து அதற்கென்று பிரத்யேக பேஸ்புக் பக்கம் துவங்கி அதில் அந்த புகைப்படங்களை ஆபாச வாசகங்களுடன் ஒரு கும்பல் பதிவேற்றி வருவது செய்தியாருக்கு தெரியவந்தது. பேஸ்புக் மட்டும் இல்லாமல் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பெண்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களையும் இந்த கும்பல் டவுன்லோட் செய்து ஆபாசமாக பயன்படுத்தி வருகின்றது. மியூசிக்கலி ஆப் போன்றவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களையும் இந்த கும்பல் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக இளம் மாணவிகள், குடும்பப் பெண்களின் புகைப்படங்களை குறி வைத்து இந்த கும்பல் திருடி வருகிறது.
இந்த கும்பலுக்கு பயந்து பல பெண்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளதும் சைபர் கிரைம் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் இந்த பேஸ்புக் பக்கங்களை முடக்குவதோடு போலீசார் தங்கள் பணியை முடித்துக் கொள்கின்றனர். அந்த பக்கங்களை உருவாக்குபவர்கள் வெளிநாடுகளில் இருப்பதால் கண்டறிய முடிவதில்லை என்று போலீசார் கைவிரிக்கின்றனர். எனவே பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதே தகவல் தொழில்நுட்பத்துறை நிபுணர்களின் அறிவுரையாக உள்ளது. இல்லை என்றால் புகைப்படங்களை நண்பர்கள் மட்டும் பார்க்கும் வகையில் பேஸ்புக்கில் செட்டிங்கை மாற்றி வைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.