"வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு புகார்...” வரும் 12ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
நடந்து முடிந்த தேர்தல்களில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது. இதனால், பழைய முறைப்படி வாக்குச்சீட்டு மூலம் பொதுமக்கள் ஓட்டு போட வேண்டும் என அனைத்து கட்சியினரும் புகார் கூறி வருகின்றனர்.
குறிப்பாக மத்திய அரசியல் கட்சிகளான ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் வாதி, சமாஜ் வாதி உள்பட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்து வருகின்றன.
அதேபோல் தமிழகத்தில் பாமக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் புகார் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், அனைத்து கட்சியினரின் சந்தேகங்களை போக்க வரும் 12ம் தேதி கூட்டம் நடத்த இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள முறைகேடுகள் குறித்த புகார்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். அப்போது, தங்களது சந்தேகங்களையும், புகார்களையும் அரசியல் கட்சியினர் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.