ஆகாஷ் ஏவுகணை பரிசோதனை வெற்றி: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு!
புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்ததற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்
![DRDO conducts successful flight test of New Generation AKASH missile off Odisha coast smp DRDO conducts successful flight test of New Generation AKASH missile off Odisha coast smp](https://static-ai.asianetnews.com/images/01hkykb8rz3t4a3psvrdfn5ek2/akash-ng-missile_363x203xt.jpg)
ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கடற்கரையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து (ஐ.டி.ஆர்) புதிய தலைமுறை ஆகாஷ் (ஆகாஷ்-என்.ஜி) ஏவுகணை சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
மிகக் குறைந்த உயரத்தில் அதிவேக ஆளில்லா விமான இலக்கைக் குறிவைத்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையின் போது, ஆயுதமுறை மூலம் இலக்கு வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டது. “ஆகாஷ்-என்ஜி' ஏவுகணை சுமார் 80 கி.மீ. தூரம் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது. இது வான்வழி அச்சுறுத்தல்களை இடைமறிக்கும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணை அமைப்பாகும். இன்றைய சோதனையின்போது, 'ஆகாஷ்-என்ஜி' ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக” பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ரேடியோ அதிர்வெண் சீக்கர், லாஞ்சர், மல்டி-ஃபங்ஷன் ரேடார் மற்றும் கட்டளை, கட்டுப்பாடு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் இந்த ஏவுகணையில் உள்ளது.
டி.ஆர்.டி.ஓ, இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்), பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (பி.டி.எல்), பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி.இ.எல்) ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் இந்தச் சோதனையைப் பார்வையிட்டனர். ஆகாஷ்-என்ஜி அமைப்பு அதிவேக, சுறுசுறுப்பான வான்வழி அச்சுறுத்தல்களை இடைமறிக்கும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணை அமைப்பு ஆகும். இந்த வெற்றிகரமான சோதனை அடுத்தக்கட்ட சோதனைகளுக்கு வழிவகுத்துள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு புதிய பெயர் சூட்டிய தமிழக அரசு!
இந்தச் சோதனைக்காக டிஆர்டிஓ, விமானப்படை, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த அமைப்பின் வெற்றிகரமான வளர்ச்சி நாட்டின் வான் பாதுகாப்புத் திறன்களை மேலும் மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
ஆகாஷ்-என்ஜியின் வெற்றிகரமான சோதனையுடன் தொடர்புடைய குழுக்களுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளரும், டி.ஆர்.டி.ஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் வாழ்த்து தெரிவித்தார்.