dont believe rumours about 10 rupee coin says reserve bank
10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்புப்பணம் மற்றும் கள்ள ரூபாய் நோட்டுக்களை ஒழிக்கும் வகையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.
இதையடுத்து செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்றவும்,புதிதாக வெளியிட்டுள்ள ரூபாய் நோட்டுக்களைப் பெறவும் கடும் நெருக்கடி ஏற்பட்டது.
தற்போத கொஞ்சம் கொஞ்சமாக பணத்தட்டுப்பாடு நீங்கிவிட்ட நிலையில், கடைகளில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் கோவையில் தேசிய மனிதவள மேம்பாட்டு மையம் சார்பில், 'டிஜிட்டல், ஆன்லைன் மூலம் பணமில்லா பரிவர்த்தனை' தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதில், பங்கேற்றுப் பேசிய சென்னை ரிசர்வ் வங்கி, உதவி பொது மேலாளர் சரவணன் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பணமில்லா பரிவர்த்தனையை மக்களிடம் அதிகப்படுத்தும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்
பொதுமக்களிடையே, 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற கருத்து வேகமாக பரவி வருகிறது. இது, தவறானது என்றும் இதை யாரும் நம்பக் கூடாது என்றும் தெரிவித்தார்.
10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது புகார் கொடுத்தால், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பேருந்துகளில் 10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து அலுவலகங்களுக்கும் நாணயத்தை பெற்றுக் கொள்ளும்படி, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சரவணன் தெரிவித்தார்.
