இனி சுங்கச்சாவடியில் முழு கட்டணம் செலுத்த வேண்டாம்...! வருகிறது புது மாற்றம்...!
ஒரு சாலையை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறீர்களோ அதற்கு ஏற்றவாறு கட்டணம் செலுத்தினால் போதும் என்ற கொள்கையை மத்திய அரசு கொண்டு வர உள்ளது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
சுங்கச்சாவடிகள் பல தனியார் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இவர்களது கட்டுப்பாட்டில் பல ஆயிரம் கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளது.
இந்நிலையில், 2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தாக்கல் செய்தார். அப்போது, தமிழகம் உட்பட 14 மாநிலங்களில் இ-வே பில் முறை நடைமுறைக்கு வருவதாக தெரிவித்தார்.
இதைதொடர்ந்து சுங்கச்சாவடியில் பணம் கட்டும்போது குறைந்த கிலோ மீட்டரில் சாலையை உபயோகிப்பவர்களும் அதிக கிலோ மீட்டர் சாலையை உபயோகிப்பவர்களும் ஒரே அளவு பணத்தை கட்ட வேண்டியுள்ளது என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதை போக்கும் வகையில் மத்திய அரசு திட்டங்களை தீட்டி வந்தது. இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதாவது, தற்போது, ' குளோஸ்டு டோல் பாலிசி' அமலாக உள்ளது. இந்த நடைமுறையில் ஒரு வாகனம் குறிப்பிட்ட சாலையில் எத்தனை கி.மீ., பயணம் செய்கிறதோ அதற்கு ஏற்றவாறு கட்டணம் செலுத்தினால் போதும்; முழு கட்டணம் செலுத்த தேவையில்லலை. இந்த புதிய நடைமுறை சோனை முறையில், டில்லி வழியாக ஹரியானாவில் இருந்து உ.பி., செல்லும் கிழக்கு புறவட்ட எக்ஸ்பிரஸ் சாலையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில், ஒரு சாலையை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறீர்களோ அதற்கு ஏற்றவாறு கட்டணம் செலுத்தினால் போதும் என்ற கொள்கையை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. சுங்கசாவடிகளில் வாகனத்தை நிறுத்துவதால் ஏற்படும் காலதாமதத்தை நீக்க, முன்கூட்டியே சுங்க சாவடி கட்டணத்தை செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.