மும்பை தாராவி குடிசைப் பகுதியை மறுசீரமைப்பு செய்ய ரூ. 5,069 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது அதானி குழுமம்!!
மும்பையில் இருக்கும் ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியை மறுசீரமைக்க விடப்பட்ட ஏலத்தில், அதிக விலையான ரூ. 5,069 கோடிக்கு அதானி குழுமம் ஏலத்தில் எடுத்தது.
உலகின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியை மறுசீரமைப்பதற்கு ஏலம் விடப்பட்டது. தாராவி மொத்தம் 259 ஹெக்டேரை கொண்டுள்ளது. பல நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. கட்டுமானப் பணியில் ஈடுபட்டு இருக்கும் டிஎல்எப் நிறுவனம் ரூ. 2,025 கோடிக்கு ஏலம் கேட்டு இருந்தது. இந்த நிலையில் யாருமே கேட்காத அதிகபட்ச விலையான ரூ. 5,069 கோடிக்கு அதானி குழுமம் ஏலம் கோரியது. இறுதியில் இந்த ஏலத்தில் அதானி குழுமம் வெற்றி பெற்று இருப்பதாக இத்திட்டத்தின் தலைமைச் செயல் அதிகாரி எஸ்.வி.ஆர். ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ''விவரங்களை நாங்கள் மகாராஷ்டிரா அரசுக்கு அனுப்ப இருக்கிறோம். இறுதி ஒப்புதல் வழங்குவது குறித்து அரசுதான் முடிவு எடுக்கும்'' என்று தெரிவித்தார்.
தற்போது 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள 6.5 லட்சம் குடிசைவாசிகளுக்கு மறுவாழ்வு அளிக்க ஏழு ஆண்டுகள் ஆகும். இங்கு சுமார் 6.5 லட்சம் பேர் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு ஏழு ஆண்டுகளில் மீண்டும் வீடுகள் கட்டப்பட்டு குடியமர்த்தப்படுவார்கள். இதற்கான முழு திட்டத்திற்கும் ரூ. 20.000 கோடி செலவாகும் என்றும் ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார். சில வாரங்களில் இதற்கான ஒப்புதலை ஏக்நாத் ஷிண்டே அரசு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் கொரியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த நிறுவனங்கள் உட்பட எட்டு பேர், அக்டோபரில் நடைபெற்ற ஏலத்திற்கு முந்தைய சந்திப்பில் கலந்து கொண்டனர், அவர்களில் மூன்று பேர் மட்டுமே ஏலத்தில் பங்கேற்றனர். நகர்ப்புற மேம்பாட்டு நிறுவனமான நமன் குரூப் ஏலத்தில் பங்கேற்று இருந்தது. ஆனால், அவர்களது ஏலம் தகுதி பெறவில்லை.
ஏலத்தை தேர்வுசெய்ய, குறைந்தபட்சம் ரூ. 20,000 கோடிக்கு ஒருங்கிணைக்கப்பட்ட நிகர சொத்து மதிப்பை காட்ட வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தி இருந்தது. நிர்மாணப் பணியை மேற்கொள்பவர்கள் மறுவாழ்வு, புதுப்பித்தல், உள்கட்டமைப்பு ஆகியவற்றையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அரசு தெரிவித்து இருந்தது. இதன் அடிப்படையில், அதானி குழுமம் ஏற்கனவே ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறது. இது மும்பை, புறநகரான காட்கோபர் மற்றும் மத்திய மும்பையில் பைகுல்லாவிலும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.