எந்த நாட்டுடனும் ராணுவ கூட்டணி இல்லை: தெளிவுபடுத்திய இந்தியா!
இந்தியா எந்த இராணுவக் கூட்டணியிலும் இல்லை என அமெரிக்காவுடனான உறவுகள் குறித்த சீனாவின் சந்தேகங்களுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது
சிங்கப்பூரில் ஷங்கிரி-லா பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் உலக நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டில் உலக நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆசியாவின் முதன்மையான பாதுகாப்பு உச்சிமாநாடான ஷங்கிரி-லா உரையாடலின் ஒருபகுதியாக, மூலோபாய ஆய்வுகள் பற்றிய (ஐஐஎஸ்எஸ் - International Institute for Strategic Studies) நாடுகளிடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், பிராந்தியத்தின் மிக முக்கியமான பாதுகாப்பு சவால்கள் குறித்தும், முக்கியமான இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் உலக நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் ஈடுபட்டனர்.
ஷங்கிரி-லா உரையாடல் 2023இன் ஐஐஎஸ்எஸ் சிறப்பு அமர்வில் பங்கேற்ற இந்தியாவின் தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அமெரிக்க இந்தோ-பசிபிக் கமாண்டர் அட்மிரல் ஜான் அக்விலினோ ஆகியோர், ‘இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ராணுவக் கூட்டணியில் இல்லை’ என்று தெளிவுபடுத்தியுள்ளனர். இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக சீன ராணுவ பிரதிநிதி அண்மையில் சந்தேகம் எழுப்பியிருந்தார். அதுதொடர்பாக கேள்விக்கு அவர்கள் இவ்வாறு பதிலளித்துள்ளனர்.
“இந்திய பிராந்திய பாதுகாப்பில் அமெரிக்காவின் பங்கை இந்தியா எவ்வாறு பார்க்கிறது? இந்தியா தன்னை தலைமை பொறுப்பில் பார்க்கிறதா அல்லது இந்திய பெருங்கடல் பாதுகாப்பில் சமமான பங்கேற்பாளராக இருக்கிறதா?” என சீன ராணுவ பிரதிநிதி கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த இந்திய தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி, “இது தொடர்பாக நிறைய விவாதிக்கப்பட்டன. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே சீனா கேள்வி எழுப்பியுள்ளது. அதில் கண்டிப்பாக நாங்கள் உடன்படவில்லை. இந்தியாவும் அமெரிக்காவும் வலுவான பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவை கொண்டுள்ளன. பயிற்சிகள், மூலோபாயக் கருத்துக்களை பரிமாறிக் கொள்வது உள்ளிட்ட விஷயங்களில் நாங்கள் ஒத்துழைக்கிறோம். அமெரிக்காவுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் செய்து கொள்வதில், கூட்டு சேர்ந்து செயல்படுகிறோம். இது போன்ற உறவுகளின் இயல்பான அம்சம். ஆனால், அத்தகையை உறவுகள் உளவுத்துறை தகவல்தொடர்பு போன்று வகைப்படுத்தப்படுகிறது.” என்றார்.
சூப்பர்.! இந்தியாவில் உருவாகும் போர் விமான இயந்திரங்கள் - பிரதமர் மோடியின் அசத்தல் திட்டம்
“அனைத்து நாடுகளைப் போலவே, இந்தியாவும், அமெரிக்காவும் நட்புறவுடன் இணைந்து செயல்படுகிறது. அனைத்து நாடுகளுமே இறையான்மைக்குட்பட்டு, அவர்களின் உரிமைகளுக்குள் செயல்படுவதாக நினைக்கிறேன். அதேசமயம், ராணுவக் கூட்டணியில் இந்தியாவுக்கு நம்பிக்கை கிடையாது. இந்தியா எந்த ராணுவக் கூட்டணியிலும் அங்கம் வகிக்கவில்லை.’ என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியப் பெருங்கடல் விஷயத்தில் சீனாவை தாக்கிப் பேசிய விக்ரம் மிஸ்ரி, யாரும் தலைவர் கிடையாது; மற்றவர்களை பின்பற்றுபவர்களும் கிடையாது; அது தொடர்பான கேள்விக்கே இடமில்லை; குறிப்பிட்ட பிராந்திய கட்டுமானங்களில் நாம் அனைவரும் சமமான பங்கேற்பாளர்கள். நாங்கள் அங்கம் வகிக்கும் அனைத்து விஷயங்களிலும் அனைவரையும் சமமான பங்கேற்பாளர்களாகவே நாங்கள் பார்க்கிறோம் என்றார்.
அதேபோல், அமெரிக்கா எந்த நாட்டுடனும் ராணுவக் கூட்டணியில் இல்லை என்று அமெரிக்க இந்தோ-பசிபிக் கமாண்டர் அட்மிரல் ஜான் அக்விலினோ உறுதிபட தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்காவிற்கு உலகம் முழுவதும் பல நாடுகளுடன் உறவுகள் உள்ளன, இருதரப்பு, சில பலதரப்பு உறவுகள் உள்ளன. ஆனால், ராணுவ கூட்டணி என்பது கிடையாது. எங்களுக்குள் சிறப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் உள்ளது. அதேசமயம், இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்களின் இறையாண்மை சவாலுக்கு உட்படும்போது, எங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களுக்கு அமெரிக்கா செய்கிறது. இது எங்களுக்குள்ளான நட்புறவு. எனவே, யாரும் யாரையும் துரத்தவில்லை. நாங்கள் எங்களது உறவுகளுக்கு மதிப்பளித்து அதனை பேணிக்காக்கிறோம்.” என்றார்.
குவாட் அமைப்பு ராணுவக் கூட்டணி அல்ல
குவாட் அமைப்பு என்பது ராணுவ கூட்டணி அல்ல எனவும், ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுதான் அந்த அமைப்பு என்பதை இந்தியாவும் அமெரிக்காவும் தெளிவுபடுத்தியுள்ளது.
“குவாட் நாடுகள் ஒன்றிணைந்து ராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாக செயல்படுகின்றன என்பது உண்மைதான். அவை ஒன்றாக இணைந்து திறன்களை அதிகரிக்க செய்யப்படுகிறது. எனவே நாங்கள் தெளிவாக இருக்கிறோம், எந்த வகையிலும் ராணுவக் கூட்டணி அல்ல” என ஜான் அக்விலினோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவரது கருத்தை சுட்டிக்காட்டிய இந்திய தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகரும் குவாட் அமைப்பு ராணுவ கூட்டணி அல்ல என தெளிவுபடுத்தியுள்ளார்.