மோடி ஆக்ஷன் இது ஸ்டார்ட்டிங்தான்… இன்னும் நிறைய இருக்கு...!! பயமுறுத்துகிறார் நிதி அயோக் தலைவர்
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில், மோடியின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு என்பது தொடக்கம்தான். இது முடிவு அல்ல. ஊழலை ஒழிக்க அடுத்தடுத்து தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிதி அயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்தார்.
ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் நிதி அயோக் அமைப்பின் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “ கருப்புபணத்தை ஒழிப்பதற்கு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்த நடவடிக்கை தான் பிரதமர் மோடியின் கடைசியானது என நீங்கள் நினைத்தால் அது இல்லை. இன்னும் அதிகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த நாட்டில் இன்னும் இருக்கும் கருப்பு பணத்துக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கைகள் இருக்கும், வேறு ஒரு உருவத்தில் நடவடிக்கை எடுக்கப்படலாம், கருப்பு பணம் சேர்க்கும் எண்ணம் குறையும் வரை இது தொடரும்.
என்ன மாதிரியான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இருக்கும் என்பதை ஊகமாக இப்போது நான் கூற முடியாது. பிரதமர் மோடி தனது அமைச்சரவை, அதிகாரிகளுடன் கலந்து பேசி அந்த நடவடிக்கைகளை எடுப்பார். நாம் பொறுத்து இருந்து பார்ப்போம்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் வரிகளை ஒழுங்கு படுத்தும் முயற்சியும் நிதி அமைச்சகம் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நிச்சயமாக அடுத்து வரும் காலங்களில் முன்னேற்றம் இருக்கும்.
கடந்த ஆண்டு முன்னேற்றம் இருந்தது. அதுபோல் அடுத்த ஆண்டும் முன்னேற்றம் இருக்கும். வரிகளை எளிமைப்படுத்துதல், வரிகளை குறைத்தல் போன்றவை, கருப்புபணம் சேர்க்கும் எண்ணத்தை கட்டுப்படுத்தும்.
ரூபாய் நோட்டு செல்லாத அறிப்பின் பலன் வரும் 2016-17ம் நிதியாண்டில்தான் பார்க்க முடியும். இன்னும் 5 மாதங்கள் இருக்கிறது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு முன் நாட்டின் பொருளாதார வளரச்சியை 7.2 சதவீதம் இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின் நிலையை இப்போது கூறமுடியாது. ஆனால், பெரும்பான்மையான பொருளாதார நிபுனர்கள், பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதம் குறையும் என்று தான் கூறுகின்றனர்.
கருப்ப பணம் வைத்து இருப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். கருப்பு பணத்தின் மீது பிரதமர் மோடி நேரடியான தாக்குதல் நடத்தி வருகிறார். இதற்கு மக்களும் ஆதரவு அளித்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.