மத்தியஅரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், கருப்பு பணம் பதுக்கியவர்கள், சட்டவிரோதமாக செல்லாத ரூபாய் நோட்டை மாற்றியவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.100 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் விரைவில் மக்களிடையே புழக்கத்துக்கு விடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரூ.100 கோடி
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது.
இதையடுத்து, கருப்புப் பணத்தை பதுக்கி வைத்து இருப்பவர்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு பணத்தை மாற்றுபவர்கள் குறிவைத்து வருமானவரித்துறையினர், அமலாக்கப்பிரிவினர், போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், ரூ.500, ரூ.1000 நோட்டுகளை சட்டவிரோதமாக மாற்றி புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை பதுக்கியது கண்டுபிடித்து மீட்டனர். இதில், புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் ரூ. 100 கோடி அளவுக்கு இருந்தது.

அரசு உத்தரவு
வழக்கமாக பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை வருமான வரித் துறையினர் பாதுகாப்பாக வைத்து இருந்து வழக்கு முடிந்தவுடன் அரசிடம் ஒப்படைப்பார்கள். ஆனால், இந்த வழக்கு முடிய ஆண்டுக்கணக்கில் ஆகும் என்பதால், இப்போதுள்ள சூழலில் அவ்வாறு வைப்பதுேமலும் பணத்தட்டுப்பாட்டை இறுக்கும். ஆதலால், அந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யக்கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சுற்றறிக்கை
இது தொடர்பாக அமலாக்கப்பிரிவு அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து புதிய ரூபாய் நோட்டுகள், பழைய ரூபாய் நோட்டுகளையும் அரசின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்ய உத்தரவிட்டுள்ளது. இவை அனைத்தும் மிக விரைவில் மக்களிடையே புழக்கத்துக்கு கொண்டு வரப்பட இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
விரைவில் புழக்கம்
இது குறித்து அமலாக்கப்பிரிவு இயக்குநர் கர்னல் சிங் கூறுகையில், “ சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ரூபாய்கள், பொருட்களை பாதுகாப்பு அறையில் வைக்கவே முன்பு உத்தரவிட்டு இருந்தோம். ஆனால், இப்போது, அனைத்து பணத்தையும் அரசின் வங்கிக்கணக்கில்டெபாசிட் செய்ய கூறியிருக்கிறோம். அவை விரைவில் மக்களின் புழக்கத்துக்கு கொண்டு வரப்படும்'' எனத் தெரிவித்தார்.
