கேரளாவில் நேச்சுரோபதி என்ற பெயரில் நீருக்குள் வைத்து பிரசவம் பார்க்கப்பட்டதில் பச்சிளம் குழந்தை பலியாகியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரத்தில் நேச்சுரோபதி மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மாற்றுமுறை மருத்துவம் என்ற பெயரில்,கர்ப்பிணிகளுக்கு நீருக்குள் வைத்து பிரசவம் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி ஹசீனா முகமது என்ற கர்ப்பிணி பெண்,நேச்சுரோபதி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.இதற்கு முன்னர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்ததால், இந்த முறை சுகப்பிரசவம் வேண்டும் என்பதற்காக அவர் இந்த மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

ஹசீனாவுக்கு நீர் நிரப்பப்பட்ட தொட்டியில் வைத்து பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.அப்போது ஹசீனாவுக்கு அதிக அளவு இரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் ஹசீனாவுக்கு பிறந்த குழந்தையும் சில நிமிடங்களில் இறந்துள்ளது. அதிக இரத்தப் போக்கு காரணமாக ஹசீனாவின் நிலை மோசமடைந்ததால், அவர் அங்கிருந்து அருகில் உள்ள வேறு ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

குழந்தை இறந்தது குறித்து நேச்சுரோபதி மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு எந்தவித தகவலும் கொடுக்கவில்லை. ஹசீனாவின் குடும்பத்தார் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்த பின்னரே காவல்துறையினருக்கு இது குறித்து தெரியவந்துள்ளது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில்,ஹசீனாவுக்கு பிரசவம் பார்ப்பதற்கு முன்பு எந்த மருந்தும் கொடுக்கப்படவில்லை எனவும் இளநீரும்,சில பச்சிலைகளும் அளிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை உரிமையாளரான அப்பாஸ் ஹுசைன் மற்றும் மனைவி, மாமனார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.