நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகளில் பெயரளவுக்கு செயல்பட்டு வரும் கட்சிகளை அடையாளம் கண்டு, அவற்றை நீக்கும் அதிரடி நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக 200 கட்சிகள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்படவிருப்பதால், அக்கட்சிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய நேரடி வரி வாரியத்திற்கு தேர்தல் ஆணையம் உரிய விவரங்களை அனுப்பிவைத்துள்ளது.
நாடு முழுவதும் ஏராளமான அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என அங்கீகரிக்கப்பட்டிருக்கும் கட்சிகளை விட பதிவு செய்யப்பட்டிருக்கும் கட்சிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
இக்கட்சிகளில் பெரும்பாலானவை அரசியல் இயக்கங்களில் பங்கேற்காமல் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருகிறது. எனவே, இவற்றை அடையாளம் கண்டு பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் தீவிர முயற்சியில் இறங்கியது. இதன் முதற்கட்டமாக 200 கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
மேலும் இக்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், அதுதொடர்பான விவரங்கள் மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமாக டெல்லியில் மட்டும் 52 கட்சிகள் பதிவு செய்யப்பட்டு இயங்காமல் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்ததாக உத்தரப்பிரதேசத்தில் 41 கட்சிகளும், தமிழகத்தில் 39 கட்சிகளும், மகாராஷ்டிராவில் 24 கட்சிகளும் பெயரளவுக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டு இயங்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
