தேர்தலில் தங்களுக்கு வாக்களித்தால், ஆட்சிக்கு வந்தபின், இலவசங்கள் அளிப்போம் என்று அரசியல் கூறும் வாக்குறுதிகளை தடுக்க வேண்டும் என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்டு, மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தலைமை நீதிபதி ஜி. ரோகினி, நீதிபதி சங்கீதா திங்ரா சேகால் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த ஆணையை பிறப்பித்தனர். அப்போது, உச்சநீதிமன்றம் முன்பு கூறிய அறிவுரையின்படி ஏதேனும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து இருந்தால் அது குறித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
இலவசங்கள்
டெல்லியைச் சேர்ந்த அசோக் சர்மா என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், தேர்தல் நேரத்தில் வாக்களர்களைக் கவர்வதற்காக அரசியல் கட்சிகள், தங்களுக்கு வாக்களித்து ஆட்சிக்கு வரவைத்தால் இலவசங்கள் தருவோம் என்று கூறி வாக்கு சேகரிக்கிறார்கள்.

இது தற்போது நடக்கும் 5 மாநில சட்டசபைத் தேர்தலிலும் நடந்து வருகிறது. ஆதலால் இலவசங்கள் கொடுப்பதை தடுக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
விசாரணை
இதையடுத்து இந்த மனு தலைமை நீதிபதி ஜி. ரோகினி, நீதிபதி சங்கீதா திங்ரா சேகால் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
தவறு
அப்போது மனு தாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ. மைத்ரி வாதிடுகையில், “ உச்சநீதிமன்றம் இதற்கு முன், கடந்த 2013ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், தேர்தல் நேரத்தில் வாக்காளர்களைக் கவர இலவசங்கள் தருவதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்கக் கூடாது. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தவறு.
மதிக்கவில்லை
நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும். அதற்காக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்க வேண்டும் என்று கூறி இருந்தது. ஆனால், அந்த உத்தரவை தேர்தல் ஆணையம் மதிக்கவில்லை. விதிகள் ஏதும் வகுக்கவில்லை'' எனத் தெரிவித்தார்.
அவமதிப்பு வழக்கு?
அப்போது நீதிபதிகள் அமர்வு, “ உச்ச நீதிமன்றம் அறிவுறையின்படி தேர்தல் ஆணையம் ஏதேனும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து உள்ளதா? எனக் கேட்டனர். அது தொடர்பாக 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். அப்படி ஏதேனும் வகுக்கவில்லை என்றால், தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாமா? எனக் கேள்வி எழுப்பினர்.
8 வாரம் அவகாசம்
அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ 5 மாநிலத் தேர்தல் பரபரப்பில் இப்போது இருக்கிறோம், ஆதலால், பதில் அளிக்க கால அவகாசம் கூடுதலாக அளிக்க வேண்டும்'' என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் இது தொடர்பாக அடுத்த 8 வாரங்களுக்குள் பதில் அளிக்க அளிக்க உத்தரவிட்டு, வழக்கை மே 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
