டெல்லி தலைமை செயலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த முதல்வரின் கார் திருட்டு..! அதிர்ச்சி சம்பவம்..!
டெல்லி தலைமை செயலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் கார் திருடப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மாருதி சுசுகி கம்பெனியின் வேகன் ஆர் மாடல் காரை பயன்படுத்தி வந்தார். அந்த காரில் தான் தலைமை செயலகத்திற்கு வந்து போயுள்ளார்.
இந்நிலையில், வழக்கம்போல இன்று டெல்லி தலைமை செயலகத்துக்கு வந்த முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், உள்ளே சென்று பணிகளை முடித்துவிட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக காரை எடுக்க சென்றபோது அவரது கார் நிறுத்திய இடத்தில் இல்லை.
இதையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார், முதல்வரின் காரை அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். எனினும் கார் கிடைக்கவில்லை. காரை திருடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தீவிர கண்காணிப்பிலும் முழு பாதுகாப்பிலும் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வரின் கார் திருடு போயுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.