“தகப்பன் செய்த பாவத்துக்கு தண்டனை அனுபவிக்கும் மகன்’’... வேதனையில் துடிக்கும் தாவூத் இப்ராஹிம்
கோடிக்கணக்கில் சொத்துக்களை அனுபவிக்காமல், தனது மகன் மதகுருவாக மாறியதை நினைத்து, தாவூத் இப்ராகிம் கவலை அடைந்து, பெரும் மனஉளைச்சலில் இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
சகோதரர் கைது
ஆள் கடத்தல் மற்றும் மிரட்டல் காரணமாக தாவூத் இப்ராகிமின் சகோதரர் இக்பால் இப்ராகிம் கஸ்கர் மும்பையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த தகவல்களை கிடைத்துள்ளன.
இது குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் பிரதீப் சர்மா கூறியதாவது:-
தனியாக சென்ற மகன்
மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமிற்கு 3 குழந்தைகள். ஒரே மகன் மொயின் நவாஸ் டி.கஸ்கர் (31). கோடிக்கனக்காண சொத்துக்களையும், ஓட்டல்கள், வர்த்தகத்தையும் நவாஸ் கஸ்கர் கவனிப்பார் என்று தாவுத் எண்ணி இருந்தார்.
ஆனால், நவாஸ் கஸ்கரோ, தனது தந்தையின் சட்டவிரோத நடவடிக்கைகள் காரணமாக சமூகத்தில் தனது குடும்பத்தின் நற்பெயர் கெட்டுவிட்டதாக கருதி, மனைவி, குழந்தைகளுடன் தனியாக சென்று விட்டார். தனது தந்தையிடமும் கூட நவாஸ் கஸ்கர் சரிவர பேசுவதில்லை.
உறவினர்கள்
இதனால், தனக்கு பிறகு தனது தொழிலையும், வர்த்தகத்தையும் யார் செய்வார்கள் என்ற மிகப்பெரிய கவலையும் தாவூத்திற்கு ஏற்பட்டு மிகப்பெரிய மனஉளைச்சலில் உள்ளார். ஒரு சகோதரர் அனீஸ் இப்ராஹிம் கஸ்கருக்கு வயதாகிவிட்டது.
மற்ற சகோதரர்களும் இறந்துவிட்டனர். தன்னுடன் இருக்கும் சில உறவினர்களையும் நம்ப அவர் தயாராக இல்லை.
மத குருவாக மாறினார்
கடந்த சில வருடங்களுக்கு முன், தொழிலில் உதவியாக இருந்த மகன் நவாஸ் கஸ்கரும், தந்தையின் செயலால் வெறுப்படைந்து புனித குர்ஆன் நூலை முழுவதுமாக படித்து மத குருவாக மாறிவிட்டார்.
தனது அரண்மனை போன்று இருக்கும் சொகுசு வீட்டில் வாழாமல், மசூதி நிர்வாகம் வழங்கிய சிறிய வீட்டில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசிக்கும் நவாஸ் கஸ்கர் வசித்து வருகிறார். தனது குழந்தைகளுக்கு குர்ஆன் ஓத கற்று தருவது, மசூதியில் படிக்கும் குழந்தைகளுக்கு பாடம் எடுப்பது போன்றவற்றை அவர் செய்த வருகிறார்.
இதனால் தாவூத் இப்ராகிம் மிகவும் மன அழுத்தத்தில் கவலை அடைந்து உள்ளாதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.