"நண்பர்களை கொன்றவர்களை பழி தீர்க்க வேண்டும்" - சி.ஆர்.பி.எப். வீரர் கண்ணீர் மல்க உருக்கம்
சத்தீஷ்கர் மாநிலம் சுக்மாவில் மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நண்பரும், சக வீரருமான ஒருவர் மாவோயிஸ்ட்டுகளை பழிதீர்க்க வேண்டும் என கண்ணீர் மல்க பதிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் கடந்த வாரம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மத்திய அரசு சார்பில் இழப்பீட்டு வழங்கப்பட்டது. இந்த தாக்குதலில் உயிரிழந்த 4 தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றைப் பதிவிட்ட பாதுகாப்புபடை வீரர், தமது நண்பர்களை இழந்த சோகத்தில் கண்ணீர் மல்க பேசுகிறார். அப்போது, தங்களுக்கு பணம், புகழ், மரியாதை என எதுவுமே வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
தம் சக வீரர்களைக் கொன்றவர்களை பழிதீர்த்தே ஆக வேண்டும் என ஆவேசமாக பேசி பதிவிட்டுள்ளார்.
வைரலாக பரவி வரும் இந்த வீடியோ பதிவு பார்ப்பவர்களை கண்ணீர்விட்டு அழவைத்துவிடுகிறது.