கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியா... ஒரே நாளில் வரலாறு காணாத வகையில் பாதிப்பு எகிறியது..!
இந்தியாவில் முதல்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 2,293 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 2,293 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் அதன் தாக்கம் சற்றும் குறையவில்லை. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இதுவரை இந்தியாவில் 37,336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9,951 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 26,167 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,218 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 1,008 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,506 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,879 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்தம் அந்த மாநிலத்தில் 485 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 4,721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 236 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 3,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 61 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 2,719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், இதுவரை 145 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 2,526 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், தமிழகத்தில் 1,312 பேர் குணமடைந்துள்ளனர். 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் தொடங்கியதிலிருந்து இதுவரை ஒரே நாளில் 2 ,000 பேர் பாதிப்பை எட்டியது இல்லை, முதல்முறையாக நேற்று எட்டியுள்ளது. அதேபோல உயிரிழப்பிலும் 71 பேர் என்பது அதிகபட்சமான உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.