Swami Baba Ramdev in last years rally Bharat Mata Ki Jai for speaking to the withholding

சாமியார் பாபா ராம்தேவ், கடந்த ஆண்டு பொதுக்கூட்டம் ஒன்றில் ‘பாரத மாதா கி ஜே’ என்று கூறாதவர்களின் தலையை வெட்டுவேன் என்று பேசியதற்காக ஹரியானாவின் ரோடக் நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

கடந்த ஆண்டு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவாய்சி, “ எனது கழுத்தில் கத்தியை வைத்தாலும் பாரத் மாத்தா கி ஜே என்று கூற மாட்டேன்'' எனப் பேசி இருந்தார்.

அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 3-ந்தேதி ஹரியானா ரோடக் நகரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சத்பவானா பேரணி நடந்தது. அதில் சாமியார் பாபா ராம்தேவ் கலந்து கொண்டார். அப்போது , “ பாரத் மாதா கி ஜே என்று கூற மறுக்கும் லட்சக்கணக்கான மக்களின் தலையை வெட்டுவேன்'' என ராம்தேவ் பேசி இருந்தார்.

இந்த வன்முறைப் பேச்சு தொடர்பாக ஹரியானா மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் சுபாஷ்பத்ரா போலீசில் புகார் செய்தார். ஆனால், அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இதையடுத்து, ரோடக் ஜூடிசியல் நீதிமன்றத்தை அனுகி ராம்தேவ் மீது வழக்கு பதிவுசெய்ய போலீசுக்கு உத்தரவிடக்கோரி மனு செய்தார்.

இந்த மனு கடந்த 28-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, பத்ரா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஓ.பி.சவுக்கும், காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆர்.கே. ஆனந்தும் ஆஜரானார்கள்.

அப்போது இரு வழக்கறிஞர்களும் வாதிடுகையில், ராம்தேவ் பேசியது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணைக்கு அழைக்க வேண்டும். அவர் மீது ஜாமினில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்ப திவு செய்ய வேண்டும். நீதிமன்றத்தை நேரில் அனுகி, பாமா ராம்தேவ்ஜாமீன் கோரினால், அது குறித்து நீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, கூடுதல் தலைமை நீதிபதி ஹரிஸ் கோயல், “ பாபா ராம்தேவ் மீது ஐ.பி.சி. பிரிவு 504(அமைதியை குலைக்கும் வகையில் பேசுவது), பிரிவு 506(மிரட்டுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்றும், ஏப்ரல் 29-ந்தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்'' என உத்தரவிட்டார்.