தேசிய பங்கு சந்தையின் முன்னாள் இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஏப்ரல் 11 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசிய பங்கு சந்தையின் முன்னாள் இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஏப்ரல் 11 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2016 ஆண்டு டிசம்பர் மாதம் வரை சித்ரா ராமகிருஷ்ணா செயல்பட்டு வந்தார். அப்போது, இமயமலையில் உள்ள முகம் தெரியாத சாமியாரிடம் பல்வேறு ஆலோசனைப் பெற்று தேசிய பங்கு சந்தையில் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், பங்குச்சந்தை குறித்த ரகசிய தகவல்களை சாமியாரிடம் பகிர்ந்து கொண்டதாகவும் சித்ரா ராமகிருஷ்ணா மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுமட்டுமின்றி அந்த சாமியார் ஆலோசனை பேரில் முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை தேசிய பங்குச்சந்தையின் தலைமை திட்ட ஆலோசகராக நியமனம் செய்து, அவருக்கு பல முறை ஊதிய உயர்வை சித்ரா வழங்கியுள்ளார். இதன் காரணமாக, சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடி அபராதம் மற்றும் பங்குச் சந்தை நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு செபி 3 ஆண்டுகள் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர், சித்ராவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனால், முன்ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சித்ரா ராமகிருஷ்ணா மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், சித்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 6 ஆம் தேதி சித்ரா ராமகிருஷ்ணா சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அடுத்த நாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணாவை 7 நாள்கள் விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் அதாவது மார்ச் 14 ஆம் தேதி நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இந்நிலையில், தேசிய பங்கு சந்தையின் முன்னாள் இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஏப்ரல் 11 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
