Corona guidelines :இதெல்லாம் கண்டிப்பாக கடைபிடிக்கனும்.. தனியார் நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கான வழிக்காட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
ஊழியர்கள் அனைவருக்கும் தொற்று அறிகுறி இருக்கிறதா..? மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர் யாருக்கேனும் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதா என கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைவரும் உடல் வெப்பநிலை சரிபார்ப்பது மட்டுமின்றி, மூக்கு, வாய் நன்றாக முடியிருக்கும் படி முககவசம் அணியவும், இதனை மீறி ஒழுங்காக முக கவசம் அணியாமல் அலட்சியமாக இருப்பவர்களை உடனடியாக வெளியேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நபருக்கும் இரண்டு மீட்டர் இடைவெளி உள்ள படி பணியிடத்தை மாற்றியமைக்கவும் தேவையான இடங்களில் கிருமிநாசினி தெளிப்பதோடு, தற்காலிக கைகழுவும் இடம் வைக்கவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. கேண்டீன்களில் ஒரே நேரத்தில் 50% பேர் மட்டும் இருப்பதை உறுதிசெய்யவும் கேண்டீனில் உணவு பரிமாறும் ஊழியர்கள் முககவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தோடு ஊழியர்களை வீடுகளுக்கு அழைத்து சென்று வரும் வாகனங்கள் கூட்டம் இல்லாதபடியும் ஜன்னல் திறந்தப்படியும் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. எனினும், கடந்த இரு நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு சற்று குறைந்ததால் 3-வது அலை குறையத் தொடங்கியதாக பலரும் எண்ண ஆரம்பித்தனர். ஆனால், மத்திய அரசும், தமிழக அரசும் பொங்கல் மற்றும் மகர சங்ராந்தி விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறிவந்தனர். இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,82,970 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த 15-ம் தேதி நிலவரப்படி , தினசரி பாதிப்பு 2.71 லட்சமாகவும், 16-ம் தேதி 2.58 லட்சமாகவும், நேற்று முன்தினம் 2.38 லட்சமாகவும் குறைந்திருந்தநிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 18 சதவீதம் உயர்ந்துள்ளது. 3-வது அலையில், இதுவரை இல்லாத அளவில் நேற்றைய பாதிப்பு உச்சத்துக்கு சென்றுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23,888 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. முந்தைய தினம் தமிழ்நாட்டில் 23,443 பேருக்கு கொரோனா உறுதியாகியிருந்த நிலையில், இன்று அது சற்று அதிகரித்துள்ளது.