தமிழ்பெண்களை இழிவாகப் பேசுவதா? கேரளா அமைச்சரை நார் நாராக கிழித்த நக்மா
தமிழ் பெண்களை இழிவாக பேசிய கேரள அமைச்சர் எம்.எம்.மணிக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நக்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் ஏராளமானோர் தோட்டத் தொழிலாளர்களாக உள்ளனர். தங்களது உழைப்புக்கேற்ற ஊதியத்ததிற்காக இவர்கள் நீண்டநெடுங்காலமாகவும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், தோட்டத்தொழிலில் ஈடுபடும் பெண்கள் தங்களுக்கென 'பெண்பிள்ளை ஒற்றுமை' என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஊதிய உயர்வு கேட்டு கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பல கட்டப் போராட்டங்களை முன்வைத்தனர்.
இந்த போராட்டத்திற்கு செவிசாய்த்த கேரள அரசு தேயிலை மற்றும் காபி தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் கூலி 301 ரூபாயும் , ஏலக்காய் தோட்டத் தொழிலாளர்களின் கூலி 330 ரூபாயும், இரப்பர் தோட்டத் தொழிலாளர் கூலி 381 ரூபாயும் வழங்குவதாகக் கேரள அரசு அறிவித்தது.
இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் குறித்து பேசிய அம்மாநில மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம்.மணி, 40 நாட்கள் அப்பெண்கள் குடியும் கூத்துமாக வேசித்தனம் செய்தனர் என்று விஷமக் கருத்தை தெரிவித்தார். இப்பேச்சுக்காக தாம் ஒருபோதும் மன்னிப்பு கோரப்போவதில்லை என்றும் மணி கூறியிருந்தார்.
மணியின் இச்சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இந்தச் சூழலில் மணியின் பேச்சுக்கு நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான நக்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் பெண்களை இழிவாக பேசிய கேரள அமைச்சர் எம்.எம்.மணி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.