பா.ஜனதா ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை...- பிரதமர் மோடியின் பேச்சுக்கு ‘பதிலடி’ கொடுத்த காங்கிரஸ்...
காங்கிரஸ் கட்சியின் அவசரநிலை குறித்து பிரதமர் மோடி ‘மான்கிபாத்தில்’ பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, “இப்போது பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.
மான்கிபாத் பேச்சு
மான்கி பாத் நிகழ்ச்சியில் நேற்று பேசிய பிரதமர் மோடி, “ கடந் 1975ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலையை குறிப்பிட்டு பேசினார். அப்போது, அந்த கருப்பு இரவை யாராலும் மறக்க முடியாது. அப்போது மக்கள் ஜனநாயகத்தை காக்க பெரும் போராட்டம் நடத்தினார்கள்’’ என்று தெரிவித்து இருந்தார்.
பாடம் கற்றுக்கொண்டோம்
இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி அறிவிக்கை வௌியிட்டுள்ளது. அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர்டாம் வடக்கன் கூறுகையில், “ கடந்த 1975ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது அவசரநிலை கொண்டுவரப்பட்டது என்பது தவறுதலாக நடந்தது. அதில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டோம்.
அறிவிக்கப்படாத அவசரநிலை
ஆனால், பிரதமர் மோடி மீண்டும் அவசரநிலையை குறிப்பிட்டு பேசி இருக்கிறார். ஆனால், மக்கள் இப்போது மத்தியில் ஆளும் பா.ஜனதா ஆட்சியில், அறிவிக்கப்படாத அவசரநிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
மக்கள் பார்க்கிறார்கள்
கடந்த காலத்தில் இருந்து அனுபவங்களை கற்றுக்கொள்ள பிரதமர் மோடி தவறினால், வரலாறு திரும்பும். நாங்கள் கற்றுக்கொண்டோம். நீங்களும் தயவு செய்து கற்றுக்கொண்டு உங்களைத் திருத்திக்கொள்ளுங்கள். கற்றுக்கொள்ளத் தவறி தொடர்ந்து தவறுகள் செய்யாதீர்கள். நாடு உங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறது.
பெயரளவுக்கு அமைச்சரவை
என்.டி.டி.வி. நிறுவனர் பிரணாய் ராய் வீட்டில் முன் அறிவிப்பின்றி, பா.ஜனதா அரசு சோதனை நடத்தியது. மோடியின் ஆட்சியில் அமைச்சர்களின் எண்ணிக்கை பெயரளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.இது மத்திய அமைச்சரவை அல்ல. பிரதமர் மோடி தான அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்.
செல்லாத ரூபாய் நோட்டு
ரூபாய் நோட்டு தடையின் போது செல்லாத ரூபாய் நோட்டுகள் எவ்வளவு வசூல் ஆனது குறித்து இதுவரை மத்திய அரசு கூறவில்லை. அது தொடர்பான விளக்கத்தையும் அளிக்கவில்லை.
ஊடகங்களில் மத்திய அரசு குறித்து அளிக்கப்படும் விளம்பரங்கள் குறித்து மத்திய அரசு வௌ்ளை அறிக்கை வௌியிடவேண்டும். ஊடகங்களை மேலாண்மை செய்வதன் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்பது தெரிய வேண்டும்.
ஒப்பிடாதீர்கள்
அதுமட்டமல்லாமல் உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் பா.ஜனதா ஆட்சியில் ‘ஆன்ட்டி ரோமியா’ படை என்ற பெயரில், அப்பாவி இளைஞர்களையும், சிறுபான்மையினரையும் தாக்குவது அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்தத்தில் இப்போதுள்ள பா.ஜனதா ஆட்சியை என்பது அறிவிக்கப்பட்ட அவசரநிலையோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது’’ என்று தெரிவித்தார்.