காபி டே உரிமையாளர் இறப்பு விவகாரம்... வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை..!
காபி டே உரிமையாளர் சித்தார்த்தா மரணத்தில் நீடித்து வந்த மர்மம் தற்போது விலகியுள்ளது. அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தற்கொலை செய்து கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.
காபி டே உரிமையாளர் சித்தார்த்தா மரணத்தில் நீடித்து வந்த மர்மம் தற்போது விலகியுள்ளது. அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தற்கொலை செய்து கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.
இந்தியா மட்டுமல்ல உலக முழுவதும் பிரபலமாக விளங்கியவர் காபி டே உரிமையாளரும், கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான வி.ஜி.சித்தார்த்தா. இவர் காஃபி டே உள்ளிட்ட சில நிறுவனங்களை நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரை போலீசார் தேடிவந்த நிலையில் 36 மணிநேரத்திற்கு பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆனால், உடலில் காயம் இருந்ததால் அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்தது. பின்னர், பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் காஃபி எஸ்டேட்டில் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து தடயவியல் பரிசோதனைக்கு மங்களூரு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், தற்போது பிரேத பரிசோதனையின் அறிக்கையில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து நேற்று மங்களூரு நகர காவல் ஆணையர் பி.எஸ் ஹர்சா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: காபி டே உரிமையாளர் சித்தார்த்தா உடலில் காயம் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்தது.
தற்போது தடயவியல் ஆய்வில் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது ஆற்றில் குதித்த நேரத்தில், அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சித்தார்த்தா ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், அவரது இதயம் மற்றும் நுரையீரல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, உயிரிழந்து இருக்கிறார். இதுவே இறப்புக்கு காரணம் என்று தடயவியல் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.