எல்லையில் அத்துமீறும் சீன ராணுவம்.. - ஒரே நாளில் 2 முறை ஊடுருவல்!!
உத்தரகண்ட் மாநிலம் பராஹோத்தி பகுதியில் சீன ராணுவம் 2 முறை அத்துமீறி நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அத்துமீறல் கடந்த 25-ஆம் தேதி நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.,
சிக்கிம் மாநிலம் டோகாலாம் எல்லைப் பகுதி தொடர்பாக இந்தியா-சீனா இடையே கடந்த ஒரு மாதத்துக்கு மேல் பிரச்னை நீடித்து வருகிறது. அப்பகுதியில் இருநாடுகளும் ராணுவத்தைக் குவித்துள்ளன. இந்நிலையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசு அதிகாரிகள் உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்ட எல்லையான பராஹோத்தி பகுதிக்குள் கடந்த 25-ஆம் தேதி காலை 9 மணியளவில் சீன ராணுவ வீரர்கள் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
மேலும், அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களை அங்கிருந்து செல்லும்படியும் வலியுறுத்தியுள்ளனர். சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீன ராணுவத்தினர் 2 மணி நேரம் வரை அங்கு இருந்துவிட்டு மீண்டும் தங்கள் நாட்டு எல்லைக்குத் திரும்பிவிட்டனர்.
அதே நாளன்று மீண்டும் இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவத்தினர் சிறிது நேரம் இருந்துவிட்டு சென்றுள்ளனர்.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதே பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. அப்போது, இந்திய அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.