இஸ்ரோ தனது ட்விட்டர் பதிவு ஒன்றில் சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்குவதை எவ்வாறு பார்க்க முடியும் என்று கூறியுள்ளது.

இந்தியாவின் சந்திரயான் -3 ஆகஸ்ட் 20 அன்று சந்திரனுக்கு அருகில் சென்றது. ஞாயிற்றுக்கிழமை விக்ரம் லேண்டர் அதன் இரண்டாவது மற்றும் இறுதி உந்துவிசையைப் பெற்று நிலவுக்கு மிக நெருக்கமாக, 25 கிமீ தொலைவில் இருக்கிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு முந்தைய பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. தரையிறங்கும் தளத்தில் சூரிய உதயம் நிகழும் வரை லேண்டர் காத்திருக்கும் என்றும் இஸ்ரோ கூறுகிறது.

ஜூலை 14ஆம் தேதி, ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரனுக்கு இந்தியாவின் மூன்றாவது பயணம் தொடங்கியது. இதற்கு சில வாரங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 5ஆம் தேதி சந்திரயான்-3 நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது.

Scroll to load tweet…

தரையிறக்கம் எப்போது, ​​எங்கே நடக்கும்?

சந்திரயான்-3 விண்கலத்தின் தரையிறங்கும் தொகுதியான விக்ரம் லேண்டர், ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் மென்மையாகத் தரையிறங்கும். வெற்றிகரமான தரையிறக்கத்துக்குப் பின், அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இந்த சாதனையை எட்டிய நான்காவது நாடு என்ற சாதனையை இந்தியா வசப்படுத்தும். வரலாற்று சிறப்புமிக்க தரையிறங்கும் நிகழ்வு நடைபெறும் நாள் மற்றும் நேரத்தை இஸ்ரோ இன்று ஒரு ட்வீட் மூலம் உறுதி செய்தது. அதில், “சந்திராயன்-3 ஆகஸ்ட் 23, 2023 அன்று இந்திய நேரப்படி மாலை சுமார் 6:04 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.

நிலவின் தென் துருவப் பகுதியில் லேண்டர் மென்மையாகத் தரையிறங்க முயற்சிக்கும். நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய பிறகும், உந்துவிசை தொகுதி பூமியின் வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரனைச் சுற்றிக்கொண்டே இருக்கும் எனவும் இஸ்ரோ கூறியிருக்கிறது.

எப்போது, எங்கு பார்க்க வேண்டும்?

இஸ்ரோ தனது ட்விட்டர் பதிவு ஒன்றில் சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்குவதை எவ்வாறு பார்க்க முடியும் என்று கூறியுள்ளது.

Scroll to load tweet…

ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு இந்திய நேரப்படி புதன்கிழமை (ஆகஸ்ட் 23) மாலை 5:27 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிவித்துள்ளது. இஸ்ரோ இணையதளம், யூடியூப், இஸ்ரோவின் பேஸ்புக் பக்கம் மற்றும் டிடி நேஷனல் டிவி சேனல் ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பைக் காணலாம்.

நாடு முழுவதும் எதிர்நோக்கும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வைக் கண்டுகளிக்க அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 மென்மையான தரையிறக்கம் செய்யும் நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காண ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.