New Election Laws : இனி எல்லாமே 'ஆதார்' தான் மக்களே.. அமளிக்கிடையில் நிறைவேறிய.. தேர்தல் சட்ட திருத்த மசோதா..
ஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிற அவலம் இன்னும் தொடர்கிறது. குறிப்பாக ஒரே நபர் சொந்த ஊரிலும், தற்போது வசிக்கிற ஊரிலும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை பார்க்க முடிகிறது.
இதை முடிவுக்கு கொண்டு வர வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் ஒருவர் இடம் பெற முடியாத நிலை வந்து விடும். இதற்கான தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021, வாக்காளர் பதிவு அதிகாரிகள் ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களிடமும், புதிதாக வாக்காளர்களாக சேருவோரிடமும் ஆதார் எண்ணை கேட்டுப்பெற வழிவகை செய்யும்.
பாலின நடுநிலையை ஏற்படுத்தும் விதமாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951இல் மனைவி என்ற வார்த்தைக்குப் பதில் வாழ்க்கை துணை என்ற வார்த்தையைப் பயன்படுத்தவும் தேர்தல் சட்டங்கள் (திருத்த) மசோதா வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்கும் போது முதன்மை அடையாளமாக ஆதார் எண்ணை சேர்ப்பதற்கு இந்த மசோதா வழிவகை செய்யும்.
அதே நேரத்தில் ஆதார் இல்லை என்பதற்காக ஒருவர் பெயரை வாக்களர் பட்டியலில் சேர்க்க மறுக்க முடியாது.இந்த மசோதாவை மக்களவையில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ, நியாயமாக வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் சட்டம் கொண்டுவரப்படுகிறது’ என்று கூறினார். எதிர்க்கட்சிகள் அமளி நீடித்ததால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.