காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அவகாசம் கேட்கிறது மத்திய அரசு...!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
காவிரி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கான தண்ணீரின் அளவைக் குறைத்தது. அதே நேரத்தில் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக முடிவு செய்ய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து கால அவகாசம் முடியும் வரையுமே மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படுவதாக கூறுவதில் உண்மையில்லை எனவும் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை எனவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் முக்கிய இடங்களில் எல்லாம் திட்டம் (Scheme) என்றே கூறியுள்ளதாகவும் இதற்கு விளக்கம் காணவே மத்திய அரசு முயற்சி எடுத்து வருதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காவிரி வழக்கில் விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளது.
மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.