காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

காவிரி பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடுவதற்கு 2 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவா ராய், கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இனி விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த அமர்வு மத்திய அரசின் மனு, நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு தரப்பில் கடந்த 2007–ல் தாக்கல் செய்த மனு மற்றும் தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களின் சார்பில் விளக்கம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.