பண புழக்கம் சுறுசுறுப்பு; படுத்துக்கொண்ட ‘டிஜிட்டல்பேமெண்ட்’
ரூபாய் நோட்டுத் தடைக்கு பின் மிகவும் பிரபலமடைந்த டிஜிட்டல் பரிமாற்றம், இ-பேமெண்ட் முறைகள், ரூபாய் தட்டுப்பாடு நீங்கி, இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் இப்போது படுத்துக்கொண்டது. மீண்டும் மக்கள் ரொக்க பரிமாற்றத்தையே நாடத் தொடங்கியுள்ளனர்.
நாட்டில் கருப்புபணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதிஅறிவித்தார்.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ரூபாய் தட்டுப்பாட்டை சமாளிக்க, மக்களை, டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாற அரசு ஊக்கப்படுத்தியது, பலபரிசுத் திட்டங்களையும் அறிவித்தது.
இதனால், மக்களும் வேறு வழியின்றி டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாறத் தொடங்கியதால், அரசு மகிழ்ச்சி அடைந்தது. ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, கிரெடிட், டெபிட் கார்டு, யு.பி.ஐ., யு.எஸ்.எஸ்.டி. மற்றும் மொபைல் பேங்கிங் மூலம், கடந்த டிசம்பரில் 9,575 லட்சம் பரிமாற்றங்கள் நடந்தன. இதன் மதிப்பு ரூ.104.05 லட்சம் கோடி எனத் தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் பரிமாற்றம் எண்ணிக்கை 8,704 லட்சமாகவும், பிப்ரவரியில் 7,630 லட்சமாகவும் இருந்தது. இந்த இரு மாதங்களிலும் பரிமாற்ற எண்ணிக்கை அளவு படிப்படியாக குறைந்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல், இந்த இரு மாதங்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பரிமாற்றங்கள் அளவும் குறைந்தன.
யு.எஸ்.எஸ்.டி. மூலம் பரிமாற்றம் டிசம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் அதிகரித்து, பிப்ரவரி மாதம் சரிந்துள்ளது.
யு.பி.ஐ. மூலம் நடக்கும் பரிமாற்றம் அதிகரித்துள்ளது. டிசம்பர் மாதம் யு.பி.ஐ. மூலம் ரூ.20 லட்சம் பரிமாற்றமும், ஜனவரியில் ரூ.42 லட்சமும், பிப்ரவரியில் ரூ.42 லட்சமும் ஆக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.