ஆந்திராவில் கோவிலுக்கு சென்று திரும்பிய குடும்பத்தினர் கார் விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். லாரி மீது கார் மோதியதில் 2 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
கோவிலுக்கு சென்று திரும்பிய போது விபத்து
ஆந்திரா மாநிலம் பாபட்டலா மாவட்டம் ஸ்டுவர்ட்டுபுரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தைவ் சேர்ந்த 8 பேர் காரில் நந்தியாலா மாவட்டம் மகாநதியில் உள்ள கோயிலுக்கு சாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது கார் பிரகாசம் மாவட்டம் தடி செர்லா மோட்டு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.
6 பேர் பலி
அப்போது எதிர் திசையில் வந்து கொண்டு இருந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 2 குழந்தைகள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த கோர விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த குழந்தைகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் விசாரணை
மேலும் உயிரிழந்த 6 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஆந்திர மாநில அமைச்சர் கொட்டிபாடி ரவிக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், காயமடைந்தவருக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
