இந்தியா-ரஷியா கூட்டு முயற்சியில் ஒட்டுமொத்த பாகிஸ்தானுக்குள் எந்த நகரை வேண்டுமானாலும் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட நவீன பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா வடிவமைக்க இருக்கிறது.
இப்போதுள்ள பிரம்மோஸ் ஏவுகணை 300 கி.மீ. பாய்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், அதை தரம் உயர்த்தி 600 கி.மீ.பாய்ந்து சென்று, எதிரியின் இலக்கை துல்லியமாகத் தாக்கும் வகையில் அமைக்கப்பட இருக்கிறது.
கோவாவில் கடந்த வாரம் நடந்து முடிந்த பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியா-ரஷியா கூட்டு மாநாட்டில் இதற்கான ஒப்பந்தம் இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்டது.
இந்திய ராணுவத்திடம் இப்போது இருக்கும் பிரம்மோஸ் ஏவுகணையின் வலிமை 300 கி.மீ. தொலைவு வரை மட்டுமே சென்று தாக்க முடியும். இதனால், பாகிஸ்தானுன் போர் ஏதும் ஏற்பட்டால், அந்நாட்டின் உள் மாநிலங்களை குறிவைத்து இந்திய ராணுவத்தால் தாக்க முடியாது.
இதையடுத்து, சமீபத்தில் ரஷியாவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் பிரம்மோஸ் ஏவுகணையின் தரம் உயர்த்தப்பட்டு, 300 கி.மீ. தொலைவு, 600 கி.மீ. வரை சென்று தாக்கும் வலிமை உடையாதாக மேம்படுத்தப்பட இருக்கிறது. மேலும், இந்த நவீன பிரம்மோஸ் ஏவுகணையை ஆள் இல்லா உளவு விமானங்கள் மூலமும் ஏவும் வகையிலும் வடிவமைக்கப்பட உள்ளது.
கோவாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின் போது பேசிய ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், “ இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை தரம் உயர்த்தும் தொழில்நுட்பத்தில் உதவ முடிவு செய்துள்ளோம்.பிரம்மோஸ் தரம் உயர்த்தப்படும் போது, நீர், நிலம் மற்றும் விமானம் மூலமும் அதை ஏவ முடியும். அதிக தொலைவுக்கு பிரம்மோஸ் ஏவுகணையை செலுத்த முடியும். ஒட்டுமொத்தத்தில் நெக்ஸ்ஜெனரேஷன் பிரம்மோஸ் ஆக இருக்கும்'' எனத் தெரிவித்தார்.
