வகுப்பறையில் குட்டித் தூக்கம், விசிறி விடும் மாணவி... வைரலான வீடியோவால் சிக்கிய ஆசிரியை...!
ஆசிரியை உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மற்றொரு மாணவி பள்ளி சீருடையில் ஆசிரியைக்கு விசிறிக் கொண்டு நிற்கிறார்.
வகுப்பறையில் மாணவர்கள் தூங்குவது வழக்கமான காரியம் தான். ஆனால் பாடம் நடத்த வேண்டிய ஆசிரியை வகுப்பறையில் குட்டித் தூக்கம் போட்ட சம்பவம் நெட்டிசன்களை கவனிக்க வைத்து இருக்கிறது. ஆசிரியை தனது நாற்காலியில் அமர்ந்த படி தூங்கியதோடு, பள்ளி சீருடையில் அருகே நிற்கும் மாணவி ஆசிரியைக்கு விசிறி விடும் சம்பவம் பலரையும் ஆத்திரம் கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இது குறித்து இணையத்தில் வெளியாகி இருக்கும் வீடியோவின் படி, ஆசிரியை தனது நாற்காலியில் அமர்ந்த நிலையில் உறங்கிக் கொண்டு இருக்கிறார். இவரின் அருகில் பள்ளி மாணவர்கள் தரையில் அமர்ந்துள்ளனர். ஆசிரியை உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மற்றொரு மாணவி பள்ளி சீருடையில் ஆசிரியைக்கு விசிறிக் கொண்டு நிற்கிறார். இதன் பின் வீடியோ எடுப்பவர் பள்ளியின் பெயரை காட்ட முயற்சி செய்கிறார்.
அரசு ஆரம்ப பள்ளி:
அப்போது இந்த சம்பவம் கத்தார்வாரா பகுதியை அடுத்த ராஜ்கியாக்ரித் பிராத்மிக் வித்யாலா பள்ளி என தெரியவந்து உள்ளது. இது குறித்து வெளியாகி இருக்கும் மற்றொரு செய்தி குறிப்பில், இந்த சம்பவம் மேற்கு சம்பாரன் மாவட்டத்தின் பாகை புரைனா கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் நடந்ததாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஆசிரியை வகுப்பறையில் உறங்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனதை அடுத்து, ஆசிரியைக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. கல்வியாளர்கள், அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் போது, வகுப்பறையில் குட்டித் தூக்கம் போட்ட ஆசிரியை பெயர் பபிதா குமாரி என தெரியவந்து உள்ளது. மேலும் இவர் தனது உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் அப்படி செய்த்தாக தெரிவித்தார் என கூறப்படுகிறது. எனினும், இவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.