மேற்கு வங்க பள்ளிகளில் வங்காள மொழி கட்டாயம்…
மேற்கு வங்க பள்ளிகளில் வங்காள மொழி கட்டாயம்…
மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வங்காள மொழி கட்டாயமாக்கப்படும் என்று மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்தா சாட்டர்ஜி அறிவித்தார்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் அரசியல் மற்றும் சமூக தாக்கங்கள் ஏற்படுத்தக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க ஆணை ஒன்றை மேற்கு வங்காள அரசு வெளியிட்டது. அந்த ஆணைப்படி வரும் கல்வி ஆண்டு முதல் மேற்கு வங்கத்தில் அனைத்து பள்ளிகளிலும் வங்காள மொழி கட்டாய பாடமாகிறது.
இந்த ஆணை குறித்து மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்தா சாட்டர்ஜி வெளியிட்ட அறிவிப்பில் ‘‘இனி அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் வங்காள மொழியை கட்டாயம் படிக்க வேண்டும். ஆங்கில மீடியம் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் வங்காள மொழி இரண்டாம் அல்லது மூன்றாம் பாடமாக மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும். தனியார் பள்ளிகள் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்’’ என்று சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் அனைத்து பள்ளிகளிலும் மொழிப் பாடம் கற்றுதரப்பட்டாலும் அது வங்காள மொழியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இதுவரை இல்லை.
கடந்த மாதம் இதேபோல், கேரளாவில் அனைத்து பள்ளிகளிலும் மலையாளம் கட்டாய பாடமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.