15 லட்சம் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்த இந்தியா - உலகிலேயே 3-வது இடம்...!!!
மாட்டிறைச்சி விற்பனைக்கு பல மாநிலங்களில் தடை இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு நம் நாட்டில் இருந்து 15 லட்சத்து 60 ஆயிரம் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. அதுமட்டும்மல்லாமல்உலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 3-வது மிகப்பெரிய நாடு எனப் பெருமையும் பெற்றுள்ளது.
மத்தியஅரசு ஒரு புறம் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடைசெய்துள்ள நிலையில், பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை இருக்கும் நிலையில், இந்த அளவு ஏற்றுமதி ஆகியுள்ளது.
இந்த தகவலை உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு(எப்.ஏ.ஓ.) மற்றும் பொருளாதார கூட்டமைப்புக்கான அமைப்பு(ஓ.இ.சி.டி.) ஆகியவை தெரிவித்துள்ளன.
எப்.ஏ.ஓ. மற்றும் ஓ.இ.சி.டி. அமைப்புகள் 2017-2026ம் ஆண்டு வரையிலான அறிக்கையை சமீபத்தில் வௌியிட்டது. அதில், இந்தியா கடந்த 2016ம் ஆண்டு 15.60 லட்சம் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்து, தொடர்ந்து உலக அளவில் 3-வது மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர் என்ற பெயரை தக்கவைத்துள்ளது. 2026ம் ஆண்டில், உலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 16 சதவீத பங்களிப்பை இந்தியா கொண்டிருக்கும்.
மேலும், எந்த வகையான மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டது என்ற விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அதிகளவில் எருமை மாட்டிறைச்சி மியான்மருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.மேலும், கடந்த ஆண்டு இந்தியா 3.63 லட்சம் மாட்டிறைச்சியை வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்துள்ளது.
ஒட்டுமொத்தமாக மாட்டிறைச்சி ஏற்றுமதி என்பது கடந்த ஆண்டில் 1.95 கோடி டன்னாகவும், 2026ம் ஆண்டில் இது 1.24 கோடி லட்சம் டன்னாகவும் அதிகரிக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உலகிலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பிரேசில் முதலிடத்தையும், 2-வது இடத்தில் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும் உள்ளன.