ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் ‘மீன் பிரசாதம்’ - ஒருலட்சத்துக்கு மேலான மீன் குஞ்சுகளுக்கு ஏற்பாடு!!!
ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆண்டுதோறும் பாடினி குடும்பத்தாரால் வழங்கப்படும் புகழ்பெற்ற மீன்பிரசாதம் நிகழ்ச்சி ஜூன் 8-ந்தேதி ஐதராபாத்தில்நடத்தப்பட உள்ளது.
இந்த குடும்பத்தார் வழங்கும் சிறிய மீனை, நோயாளிகள் உயிருடன் விழுங்கும்போது, தங்களின் ஆஸ்துமா நோய் குணமாகிவிடுவதாக நம்புகிறார்கள். ஆண்டுதோறும் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கில் நோயாளிகள் வந்து இலவசமாக மீன்பிரசாதத்தை உண்டு வருகிறார்கள்.
ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து 3 ஆண்டுகள் மீன்பிரசாதம் சாப்பிட்டால் ஆஸ்துமா நோய் வராது என்று நோயாளிகள் நம்புகிறார்கள்.
மீன்களின் வாயில், ஒருவிதமான மருந்தை வைத்து நோயாளிகளின் வாய்க்குள் உயிருடன் போட்டு விழுங்க வைப்பார்கள். இதன் மூலம் ஆஸ்துமா நோயாளிகளுக்கு நோய் குணமாகிறது என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த மீன் மருந்துகளை சாப்பிட ஆர்வம் காட்டுவார்கள். இந்த நிகழ்ச்சி நம்பள்ளி நகரில் உள்ள மிகப்பெரிய திடலில் நடக்கும்.
இந்நிலையில் வரும் ஜூன்மாதம் 8-ந்தேதி நடக்கும் நிகழ்ச்சிக்கு ஏறக்குறைய ஒரு லட்சம் மீன்கள் தேவைப்படும் என பாடினி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தெலங்கானா கால்நடைத்துறை அமைச்சர் டி. சீனிவாச யாதவ், அதிகாரிகளுடன் இந்த நிகழ்ச்சி தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்த நிகழ்ச்சிக்கு தேவைப்படும் ஒருலட்சத்துக்கு மேலான மீன் குஞ்சுகளை ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார்.
மேலும், இந்த மீன்பிரசாதம் சாப்பிடும் நிகழ்ச்சிக்கு நாடுமுழுவதும் இருந்துஏராளமானோர் வருவார்கள் என்பதால், தெலங்கானா போக்குவரத்து துறை சிறப்புபஸ்களை இயக்கவும் அதிகாரிகளுக்கு தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.