Atal Bihari Vajpayees name missing from Lucknow civic body voters list
உத்தரப்பிரதேசம், லக்னோவில் நடந்த நகராட்சி தேர்தலில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரிவாஜ்பாயின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து காணமல் போய் இருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
லக்னோ நகரில் உள்ள பாஸ்மண்டி பாபு பனாராஸி தாஸ் பகுதியில் முன்னாள் பிரதமர் ஏ.பி.வாஜ்பாய்க்கு வாக்கு அளிக்கும் உரிமை தரப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வயது முதுமை காரணமாக தேர்தலில் வாக்களிக்க முடியாத அளவுக்கு வாஜ்பாய் உடல்நலம் குன்றியுள்ளார். தற்போது, டெல்லியில் உள்ள லூட்யன் ஜோன் பகுதியில் வசித்து வருகிறார்.
கடைசியாக கடந்த 2000ம் ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாஜ்பாய் வாக்களித்துள்ளார். அவரின் வாக்காளர் அடையாள அட்டை எண் 1054 ஆகும். 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் கடைசியாக வாஜ்பாய் வாக்களித்துள்ளார். அதன்பின் அவர் எந்த தேர்தலிலும் வாக்களிக்கவில்லை.
இதற்கிடையே சமீபத்தில் லக்னோவில் நகராட்சி தேர்தல் நடந்துள்ளது. அதில் பாஸ்மண்டிபகுதியில் வசிப்பவர்களின் வாக்காளர் பட்டியலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் குறித்து ஆய்வு செய்தபோது, அவரின் பெயர் அதில் இடம் பெறவில்லை, இது பா.ஜனதா கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மண்டல் அதிகாரி அசோக் குமார் சிங் கூறுகையில், “ தேர்தலில் அனைவரும் வாக்களிக்கவேண்டும் என்பதை தீவிரமாக வலியுறுத்தியவர் அடல் பிஹாரி வாஜ்பாய். முதலில் ஓட்டுப்போடுங்கள், அதன்பின் காலை சிற்றுண்டி சாப்பிடுங்கள் என்று பிரசாரம் செய்தவர். ஆனால், அவரின் பெயரே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.
