டெல்லியில் மதுக்கொள்கை ஊழல் தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா மற்றும் சிலருக்கு சொந்தமான ரூ.52 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

டெல்லி மதுக் கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் உள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லியின் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா உள்ளிட்ட நபர்களின் 52 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்கத்துறை பறிமுதல் முடக்கியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முடக்கப்பட்ட செய்யப்பட்ட சொத்துக்களில் அமந்தீப் சிங் தால், ராஜேஷ் ஜோஷி, கௌதம் மல்ஹோத்ரா மற்றும் சிலரின் சொத்துகளும் அடங்கும். மனீஷ் சிசோடியா மற்றும் அவரது மனைவி சீமா ஆகியோரின் இரண்டு சொத்துக்கள் மற்றும் அவர்களது வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.11 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சிசோடியாவுக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட டெல்லி தொழிலதிபர் தினேஷ் அரோரா கைது செய்யப்பட்டதை அடுத்து, அமலாக்க இயக்குநரகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியே விசாரணை நடந்திவருகிறார்கள். அமலாக்கத்துறையின் இந்த சமீபத்திய நடவடிக்கை பற்றி ஆம் ஆத்மி தலைவர் அதிஷி கூறுகையில், "சிசோடியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மத்திய அரசு ஊடகங்களில் கதைகளை கட்டிவருகிறது" என்று விமர்சித்துள்ளார்.

மேலும், "அமலாக்கதுதறை முடக்கிய இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்று, அதாவது 18 ஆண்டுகளுக்கு முன், 2005ல், மனீஷ் சிசோடியா பெயரில் வாங்கப்பட்டது. இன்னொரு பிளாட் 2018ல் வாங்கப்பட்டது. டெல்லியில் புதிய மதுக்கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பதிவுசெய்யப்பட்டவை" என்றும் அதிஷி தெரிவிக்கிறார்.

டெல்லியில் மதுபான வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு உரிமம் வழங்கியதாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆளும் ஆம் ஆத்மி திட்டவட்டமாக மறுத்துவருகிறது.

ஆனால், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்த டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பரிந்துரை செய்தார். அதன்படி டெல்லி மதுக்கொள்கை ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. அமலாக்கத்துறையும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.