பாதுகாப்பு துறை அமைச்சராக பதவி ஏற்றார் அருண் ஜெட்லி - மனோகர் பாரிக்கர் ராஜினமா செய்ததால் கூடுதல் பொறுப்பு
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, கூடுதல் பொறுப்பாக பாதுகாப்பு துறை அமைச்சராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா முதல்வராக பதவி பொறுப்பு ஏற்க இருந்ததையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கூடுதல் பொறுப்பாக அருண் ஜெட்லிக்கு பாதுகாப்பு துறை வழங்கப்பட்டது.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மூத்த அமைச்சரான ஜெட்லி, ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு மே 26-ந்தேதி முதல் நவம்பர் 9-ந்தேதி வரை பாதுகாப்பு துறை பொறுப்பை வகித்து இருந்தார். மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு துறைக்கு நியமிக்கப்பட்டவுடன், ஜெட்லி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “ பிரதமர் மோடி அலோசனையின்பேரில், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, கூடுதலாக பாதுகாப்பு துறை பொறுப்பையும் வகிப்பார்'' எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இரு அமைச்சக பொறுப்பை இன்னும் எத்தனை மாதங்கள் ஜெட்லி வைத்து இருப்பார் என்பது குறித்து தெளிவான அறிவிப்பு இல்லை.
மனோகர் பாரிக்கர் பதவிக் காலத்தில், பாதுகாப்பு துறையில் ஆயுதக் கொள்முதல் ஒப்பந்தங்கள் எளிமைப்படுத்தப்பட்டு, வேகமாக ஒப்புதல் வழங்கப்பட்டன. நிலுவையில் கிடந்த ஏராளமான திட்டங்களுக்கு முறைப்படி அனுமதி கொடுத்து அதை துரிதப்படுத்தினார்.
குறிப்பாக 21 ‘அப்பாச்சே’ போர் ஹெலிகாப்டர்கள், 15 சின்னூக் எனப்படும் கனரக பொருட்களை தூக்கிச் செல்லும் அமெரிக்க தயாரிப்பு ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன.
கடந்த ஆண்டு மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், நீண்ட காலமாக கிடப்பில் இருந்த 145 இலகுரக பீரங்கிகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் ஒப்பந்தம் கையொப்பம் ஆனது. இதன் மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடியாகும். 18 தனுஷ் எனப்படும் சிறிய ரக பீரங்கிகள் ஆகியவை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டன.
பாதுகாப்பு துறையில் வேகமான கொள்முதல் நடக்க வேண்டும், ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக கடந்த மார்ச் மாதம் புதிய கொள்முதல் கொள்கையை பாரிக்கர் அறிமுகப்படுத்தினார்.
மேலும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் பிரான்ஸ் நாட்டில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனுடைய 36 ‘ரபேல்’ போர் விமானங்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டன. இதுபோன்ற முக்கிய ஒப்பந்தங்கள் பாரிக்கர் அமைச்சராக இருந்தபோது செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.