காங்கிரஸ் ஆட்சியில் என்ன நடந்ததாம் - மன்மோகன் சிங்குக்கு பதிலடி கொடுத்த அருண் ஜெட்லி
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்தான் 2 ஜி, காமன்வெல்த் விளையாட்டு போட்டி மற்றும் நிலக்கரி சுரங்க ஊழல் போன்ற ‘திட்டமிட்ட கொள்ளை’ நடந்ததாக கூறினார்.
அருண் ஜெட்லி பதிலடி
குஜராத் மாநிலத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங், ரூபாய் நோட்டு தடை மற்றும் ஜிஎஸ்டி வரி விவகாரத்தில் மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக கடும் தாக்குதல் தொடுத்து இருந்தார்.
மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, மன்மோகன்சிங் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். அவர் கூறியதாவது-
அதிரடி மாற்றம்
‘‘உயர் ரூபாய் நோட்டுகள் தடை அறிவிப்பு இந்திய வரலாற்றில் திருப்புமுனை நடவடிக்கையாகும். நாட்டின் வழக்கமான பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம் ஏற்படுத்தவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பொருளாதாரத்தில் குறைந்த பணப்புழக்கம் இருந்தால் ஊழல் குறையும் என்று அர்த்தம் அல்ல. ஆனால், வரி ஏய்ப்பு செய்வதை நிச்சயம் அது கடினமாக்கிவிடும்.
2 ஜி, நிலக்கரி சுரங்க ஊழல்
காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோதுதான் 2 ஜி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி மற்றும் நிலக்கரி சுரங்க ஊழல் ேபான்ற ‘திட்டமிட்ட கொள்ளை’கள் நடைபெற்றன.
ரூபாய் நோட்டு தடை என்பது, அற நெறியுடன் கூடிய பொருளாதார நடவடிக்கையாகும். ஒரு குடும்பத்திற்காகவே பணியாற்றுவதுதான் காங்கிரசின் நோக்கமாகும். ஆனால், பா.ஜனதா மக்களுக்காக பணியாற்றி வருகிறது.
ரூபாய் நோட்டு தடையால் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்வது தடுக்கப்பட்டது. போலி கம்பெனிகள் அடையாளம் காட்டப்பட்டு வருகின்றன. 18 லட்சம் வங்கி டெபாசிட்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.