ஒழுங்காக வரி செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை - அருண் ஜேட்லி எச்சரிக்கை
வரிகளை தவறாமல் செலுத்துவது குடிமக்களின் கடமை என்றும், தவறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மத்திய நிதியமைச்சர் திரு. அருண் ஜேட்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஃபரிதாபாத்தில், இந்திய வருவாய்த்துறை சேவை அதிகாரிகளின் பயிற்சியை தொடங்கி வைத்து, நிதியமைச்சர் அருண்ஜேட்லி உரையாற்றினார். அரசால் விதிக்கப்படும் நியாயமான வரிகளை செலுத்துவது, குடிமக்களின் கடமை என்று குறிப்பிட்ட அவர், தவறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.
கடந்த 70 ஆண்டுகாலமாக வரி செலுத்தாவிட்டால் பெரிய குற்றம் இல்லை என்ற மனோநிலை மக்களிடையே ஏற்பட்டுவிட்டதாக அமைச்சர் வருத்தம் தெரிவித்தார்.
வரி செலுத்தாமல் தப்பிப்பது கெட்டிக்காரத்தனம் என்ற போக்கு ஏற்பட்டுவிட்டதாகவும், அமைச்சர் குறிப்பிட்டார். வருங்காலத்தில் பொதுமக்கள் தாங்களே முன்வந்து வரி செலுத்தும் நிலைமை உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் திரு. அருண்ஜேட்லி தெரிவித்தார்.