ஐ.நா.வின் அமைதிப் படையில் 25 இந்திய வீராங்கனைகள்!
சூடான் எல்லைப் பகுதியில் அமர்த்தப்பட்டுள்ள ஐ.நா.வின் பாதுகாப்புப் படையில் பணியாற்ற இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 25 பெண் வீராங்கனைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு சூடான், தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான எல்லையில் அமைந்துள்ள அபெய். எண்ணெய் வளம் மிகுந்த இப்பகுதியைக் கைப்பற்ற இரு நாடுகளும் போட்டியிடுகின்றன. அங்கு நிகழும் வன்முறைகளால் அப்பகுதியில் எப்போதும் பதற்றம் நிலவுகிறது. இச்சூழல் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக நீடிக்கிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைத்து அபெய் எல்லையில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை தனது இடைக்கால பாதுகாப்புப் படையை பணியமர்த்தியது. அந்தப் படையினர் அங்கே உள்ள மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவருகின்றனர்.
இந்தப் படையில் இணைந்து பணியாற்ற 25 வீராங்கனைகளை இந்திய ராணுவம் அனுப்பியுள்ளது. இரண்டு அதிகாரிகளுடன் 25 வீராங்கனைகளைக் கொண்ட இந்தியப் படை அபெய் எல்லைப் பகுதிக்குச் செல்கிறது. இவர்கள் அங்கு முகாமிட்டு அப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதுடன் அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்யவுள்ளனர்.
இதைப்பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “இதைக் கண்டு பெருமிதம் அடைகிறேன். அமைதியை நிலைநாட்டுவதற்கான ஐ.நா.வின் முயற்சிகளில் இந்தியா தொடர்ந்து பங்கெடுத்து வருகிறது. நமது பெண் சக்தி அதில் பங்கேற்பது இன்னும் மகிழ்ச்சிக்குரியது” என்று கூறியுள்ளார்.
ஜிம்மில் நேர்ந்த விபரீதம்! உடற்பயற்சி செய்யும்போது திடீர் மரணம்! வைரலாகும் சிசிடிவி காட்சி!
இந்தய வீராங்கனைகளுக்கு வாழ்த்து கூறியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ஐ.நா. அமைதிப் படையுடன் நாம் கொண்டிருக்கும் நீண்ட உறவு இப்போது நமது பெண்களின் சக்தியைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இவர்கள் தங்கள் கடமையைச் சிறப்பாகச் செய்து நாட்டுக்குப் பெருமை தேடித் தருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
2007ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐ.நா.வின் இடைக்கால பாதுகாப்புப் படையில் சேரவுள்ள மிகப்பெரிய வீராங்கனைகள் குழு இதுவாகும். இதற்கு முன் லைபீரியா நாட்டைச் சேர்ந்த 125 வீராங்கனைகள் ஐ.நா.வின் இடைக்கால பாதுகாப்புப் படையில் பணிபுரிய அந்நாட்டு அரசால் அனுப்பிவைக்கப்பட்டனர்.