ராணுவ ஆள்சேர்ப்பு தேர்வு ரத்து – வினாத்தாள் வெளியானதால் மத்திய அரசு அதிரடி
ராணுவ பலத்தில் உலகில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்திய பாதுகாப்பு படை பணியில் சேர நாடு முழுவதும் இன்று எழுத்து தேர்வுகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், தானே பகுதியில் நடைபெறவுள்ள தேர்வுகளில் பங்கேற்க வந்தவர்களில் சிலர், தேர்வு மையங்களுக்கு செல்லாமல் தாங்கள் தங்கியிருந்த அறைகளில் இருந்தவாறே தேர்வுகளை எழுதிகொண்டிருப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸ் படையினர் விரைந்து சென்று அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது, முன்கூட்டியே வெளியான கேள்வித் தாள்களை கையில் வைத்துகொண்டு தேர்வு எழுதி கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதைபார்த்த போலீசார் அந்த மாணவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ராணுவ பணிக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு நிறுவனத்தின் மூலமாக வினாத்தாள் கிடைத்தது என குறிப்பிட்டனர்.
கேள்வித் தாள்களை தயாரித்த ராணுவ உயரதிகாரிகள் முன்கூட்டியே சில தரகர்கள் மூலமாக வினாத்தாள்களை வெளியிட்டுள்ளது தெரியவந்தது.
இப்படி, வெளியான கேள்வித் தாள்களை தலா 2 லட்சம் ரூபாய்க்கு ஒரு கும்பல் விற்பனை செய்ததும், இந்த மாபெரும் துரோகத்துக்கு ராணுவ உயரதிகாரிகளில் சிலர் உடந்தையாக இருந்ததும் அம்பலமானது.
இதையடுத்து, குறுக்கு வழியில் ராணுவ வேலையில் சேர முயற்சித்த சுமார் 350 மாணவர்களையும், ராணுவ தேர்வுக்கு பயிற்சி அளித்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள், இடைத் தரகர்கள் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட 18 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பிடிபட்ட மாணவர்கள் மற்றும் கைதானவர்களில் பலர் தானே, நாக்பூர், கோவா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைதொடர்ந்து இன்று நடைபெற்று வந்த ராணுவ ஆள்சேர்ப்பு தேர்வை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.