Apologise To Parliament Not To Air India Manager Says Shiv Sena MP Ravindra Gaikwad
சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டது குறித்து முறையாக விளக்கத்தை மத்திய அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ அளிக்கவில்லை. இதையடுத்து சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஆனந்த கீதே, மற்றும் கட்சி எம்.பி.கள் மக்களவையில் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டு கூச்சலிட்டனர்.
செருப்பால் அடித்தது
ஏர் இந்தியா விமான நிறுவன மேலாளரை செருப்பால் அடித்தது தொடர்பாக சிவசேனா எம்.பி. ரவிந்திர கெய்க்வாட்டுக்கு விமானத்தில் பயணம் செய்ய தடைவிதித்து அனைத்து நிறுவனங்களும் முடிவு செய்தன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
முதல்முறையாக
இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு பின் சிவசேனா எம்.பி. ரவிந்திர கெய்க்வாட் நேற்று மக்களவைக்கு சென்றார். அவை தொடங்கியதும், எம்.பி. ரவிந்திர கெய்க்வாட் இந்த விவகாரம் தொடர்பாக ஓர் அறிக்கையை படித்தார்.

அமைதி காத்தேன்
அதில், “ ஏர் இந்தியா ஊழியரை அடித்தது தொடர்பாக என்னிடம் விசாரணை செய்யப்படாமலேயே நான் விமானப்பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது, என்னுடன் பல அதிகாரிகள் வாக்குவாதம் செய்தனர். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைதியான முறையில்தான் பதில் அளித்தேன்.
7 முறை ரத்து
அந்த அதிகாரி என்னிடம் பேசியபோது, நீங்கள் யார் என நான் கேட்டபோது, ‘ ஏர் இந்தியாவின் அப்பன்’ என்று பேசிவிட்டு, நீங்கள் என்ன மோடியா? என்னிடம் கேட்டார். நான் மக்களவை எம்.பி. என்று பதில் அளித்தேன். என் மீது கையை வைத்து தள்ளிய பின் நான் பதிலுக்கு தள்ளினேன். இந்த சம்பவத்துக்கு பின் 7 முறை டிக்கெட் முன்பதிவு செய்து ரத்து செய்யப்பட்டது.
நாடாளுமன்றத்தில் மன்னிப்பு
இந்த விவகாரம் தொடர்பாக நான் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க தயார் ஆனால், விமான ஊழியரிடம் மன்னிப்பு கோர முடியாது. என் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் ’’ என்று தெரிவித்தார்.
சட்டப்படிதான் நடவடிக்கை
இதற்கு பதில் அளித்து விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கஜபதி ராஜூ பேசுகையில், “ விமானம் என்பது மக்கள் பாதுகாப்பாக பயனம் செய்ய பயன்படும் எந்திரம். பாதுகாப்பு மிக முக்கியம், பாதுகாப்பில் சமரசம் செய்யக்கூடாது. இந்த பிரச்சினையை தணிக்கவும் செய்யலாம், அல்லது வலுவாக்கவும் செய்யலாம் அது கெய்க்வாட் விருப்பம். கெய்க்வாட்டின் மீது விதிக்கப்பட்ட தடை சட்டப்படியானதுதான்’’ என்றார்.
அமளி, கோஷம்
இதைக் கேட்டு சிவசேனா கட்சி எம்.பி.கள் ஆத்திரத்தில் பலமாக கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் கஜபதி ராஜூவை சுற்றுநின்று கோபத்தில் கடும் சிவசேனா எம்.பி.கள் ஆவேசமாகப் பேசினர்.
ஆவேசப் பேச்சு
இதில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆனந்த் கீதேவும் இணைந்து கொண்டு கஜபதி ராஜூவை ஆவேசமாகப் பேசினார். ‘ஒரு தரப்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது, வெட்கக்கேடு, வேதனை’ என்று கோபத்தில் ஆனந்த் கீதே பேசினார்.
விளக்கம்
இதைப் பார்த்த காங்கிரஸ் எம்.பி.கள் வெட்கக்கேடு என்று கோஷமிட்டனர். மத்திய அமைச்சர் கஜபதி ராஜூவை பிடித்து தள்ளுகிறார்கள் இதற்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்.எம்.பி. மல்லிகார் ஜூன கார்கே பேசினார்.
ஒத்திவைப்பு
இதைப் பார்த்த மற்ற மத்திய அமைச்சர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதையடுத்து மத்திய அமைச்சர் ராஜ் நாத் உள்ளிட்ட பல அமைச்சர்கள் அமைச்சர் ஆனந்த் கீதே உள்ளிட்ட சிவசேனா எம்.பி.களை ஆறுதல்படுத்தி அமரவைத்தனர். அதே சமயம், அங்கிருந்து அமைச்சர் கஜபதி ராஜூ வெளியேறினார். இதையடுத்து அவையை சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.
