முதலில் அமராவதி மெடிக்கல் ஓனர் கொலை... அடுத்து ராஜஸ்தான் டெய்லர் கொலை... என்ன நடந்தது? விசாரிக்கிறது என்ஐஏ!!
நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக இரண்டு கொலைகள் நிகழ்ந்துள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக கடந்த வாரம் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லராக இருப்பவர் கண்னையா லால். இவர் நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்து பாஜக செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 28ம் தேதி இவரது கடைக்கு கத்தி மற்றும் வாளுடன் சென்ற சிலர் பட்டப்பகலில் கண்னையா லாலை கொடூரமாக கொலை செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் துணிகளுக்கு அளவீடு செய்வதாக கூறி தையல் கடைக்கு வந்து கடைக்காரரை கொடூரமாக கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. குற்றம் சாட்டப்பட்ட கொலைகாரர்கள் தையல்காரரின் தலையை ஆயுதத்தால் கொடூரமாக வெட்டியது மட்டுமல்லாமல், அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதை அடுத்து இதில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: நுபுர் ஷர்மாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்… கொல்கத்தா காவல்துறை அதிரடி!!
ராஜஸ்தான் டெய்லர் கொலைக்கு ஒருவாரத்திற்கு முன்பு மகாராஷ்டிராவில் மருந்து கடைக்காரர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. 54 வயதான உமேஷ் கோல்ஹே, மகாராஷ்டிரா அமராவதி நகரில் ஜூன் 21 அன்று வேலையை முடிந்துவிட்டு வீடு திரும்பியபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். காவல்துறையினரால் வெளியிடப்பட்ட சிசிடிவி காட்சிகளில், இரவு 10 மணியளவில் கோல்ஹே தாக்கப்படுவதற்கு முன்பு அவரை சிலர் பின்தொடர்வது பதிவாகியுள்ளது. அப்போது, அவரது 27 வயது மகனும் மனைவியும் மற்றொரு வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். உள்ளூரைச் சேர்ந்த ஒரு சாரார் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரை கடுமையாக சாடியுள்ளனர்.
இதையும் படிங்க: விளம்பரத்திற்காக பேசினாரா நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை இந்த வழக்கை உதய்பூர் கொலையை விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியுள்ளார். கொலை நடந்த 12 நாட்களில், ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால் இன்று காலை வரை நுபுர் ஷர்மா சம்பவத்துடன் இதை தொடர்புப்படுத்தவில்லை. இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நுபுர் ஷர்மாவைப் பற்றி அவர் பதிவிட்டதால் அவரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் எங்களிடம் கூறியுள்ளனர் என்றார். கோல்ஹே கொலைக்காக கைது செய்யப்பட்ட 6 பேரும் அமராவதியில் வசிக்கும் முதாசிர் அகமது, ஷாருக் பதான், அப்துல் தௌபீக், ஷோயப் கான், அதிப் ரஷீத் மற்றும் யூசுப் கான் பகதூர் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.