கோரிக்கை நிறைவேறாவிட்டால் இப்படியா செய்வது... - உ.பி. முதல்வர் ‘ஆதித்யநாத்தை திருமணம் செய்த பெண்’
உத்தரப்பிரதேசத்தில் உள்ள அங்கன்வாடி பெண் பணியாளர்கள் தங்களின் நீண்டகால கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக்கோரி, மாநில அரசுக்கு புதுவிதமாக நெருக்கடிகளை கொடுத்துள்ளனர்.
அந்த மாநில முதல்வரும், துறவியாக இருக்கும் யோகி ஆதித்யநாத்தின் புகைப்படத்தை சீதாபூரைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர் திருமணம் செய்து போராட்டம் நடத்தியுள்ளார்.
சீதாபூர் நகரில் பணியாற்றில் அங்கன்வாடி பணியாளர்கள் முன்னிலையில், ‘மகிலா அங்கன்வாடி கர்மாச்சாரி’ சங்கத்தின் மாவட்ட தலைவர் நீது சிங், முதல்வர் ஆதித்யநாத்தின் புகைப்படத்தை திருமணம் செய்து தங்களின் கோரிக்கையை வலியுறுத்தினார்.
யோகி ஆதித்யநாத்தின் முகமூடியை மாட்டிக்கொண்ட ஒரு பெண்ணை மணமகனாக பாவித்து, மாலைமாற்றி நீது சிங் திருமணம் செய்தார்.
இது குறித்து ‘மகிலா அங்கன்வாடி கர்மாச்சாரி’ சங்கத்தின் மாவட்ட தலைவரும், ஆதித்யநாத்தை திருணம் செய்தவருமான நீது சிங் கூறுகையில், “ முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புகைப்படத்தை நான் திருமணம் செய்ததின் மூலம் 4 லட்சம் சகோதரிகள் பயன்பெறுவார்கள். வெள்ளிக்கிழமை சீதாபூருக்கு வரும் முதல்வர் யோகியுடன் நானும் செல்கிறேன்.
எங்களின் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில், நான் முதல்வர் யோகியை குதிரையில் பயணம் செய்து சந்திப்பேன்’’ என்று தெரிவித்தார்.
அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கைகள் 4 மாதங்களில் நிறைவேற்றி வைக்கப்படும் என பா.ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் தெரிவித்தது. ஆனால், 8 மாதங்கள் ஆகியும் கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை என அங்கன்வாடி பணியாளர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.