ancient city of india announced by unesco
இந்தியாவிலேயே முதல்முறையாக அகமதாபாத்தை உலகப் பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது
யுனெஸ்கோ உலக பாரம்பரிய கமிட்டியின் 41வது கூட்டம் போலந்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க அகமதாபாத் நகரை உலக பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
துருக்கி, போர்சுக்கல், தென் கொரியா, ஜிம்பாப்வே, க்யூபா உள்ளிட்ட 20 நாடுகள் இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரமாக அகமதாபாத்தை தேர்வு செய்ய பரிந்துரை செய்தன.
இதனைத் தொடர்ந்து மத ஒருங்கிணைப்பிற்கு எடுத்துக்காட்டாக திகழும் அகமதாபாத் நகரம் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டது. இதன்மூலம் பாரிஸ், காரினோ, எடின்பர்க் உள்ளிட்ட நகரங்களைத் தொடர்ந்து 287 வது உலக பாரம்பரிய நகரங்கள் பட்டியலில் அகமதாபாத் இணைந்துள்ளது.

யுனெஸ்கோவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபனி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் முதன்முதலில் அகமதாபாத் யுனெஸ்கோவின் உலகப் பரம்பரை நகரமாக அங்கீகரிக்கப்பட்டது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
11 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட அகமதாபாத், இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு மையத்தால் பாதுகாக்கப்பட்ட 36 கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது, இதே போல் பழங்கால கட்டிடக்கலையின் படி கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இங்கு உள்ளன.
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னால் அகமது ஷாவால் கோட்டை நகரமாக அமைக்கப்பட்டது. மகாத்மா காந்தி இங்கு 1915 முதல் 1930 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
