சமீபத்திய சமூக ஊடக உரையாடலில், ஆனந்த் மஹிந்திரா புதிதாக நியமிக்கப்பட்ட எஃப்.பி.ஐ இயக்குநரான காஷ் படேலுக்கு மஹிந்திரா தார் பரிசளிக்கலாம் என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.
மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாகவும், நகைச்சுவையாகவும் பதிலளிப்பவர் என்று அறியப்படுகிறார். சமீபத்திய சமூக ஊடக உரையாடலில், புதிதாக நியமிக்கப்பட்ட ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) இயக்குநரான காஷ் படேலுக்கு மஹிந்திரா தார் பரிசளிக்கப்படலாம் என்று ஆனந்த் மஹிந்திரா சூசகமாக தெரிவித்தார். மஹிந்திரா எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் படேலின் படத்தைப் பகிர்ந்து, "காஷ் படேல், எஃப்.பி.ஐ-யின் புதிய இயக்குநர். இவர்கிட்ட வச்சுக்க முடியாது போல. பார்த்து இருங்க." என்று தலைப்பிட்டபோது இந்த உரையாடல் தொடங்கியது.
மஹிந்திராவின் பதிவுக்கு வந்த எண்ணற்ற பதில்களில், ஹர்ஷித் என்ற எக்ஸ் பயனர், "இவருக்கும் தார் கிஃப்ட் பண்ணுங்க சார்" என்று கேட்டார். அதற்கு ஆனந்த் மஹிந்திரா, "ம்ம்ம்... தார் வண்டிக்கு லாயக்குதான் இந்த ஆளு" என்று பதிலளித்தார்.
மஹிந்திரா தார் பரிசளித்த வரலாறு
அசாதாரண சாதனைகள் செய்த தனிநபர்களுக்கு மஹிந்திரா வாகனங்களை பரிசளிக்கும் பழக்கம் ஆனந்த் மஹிந்திராவுக்கு உண்டு. இதற்கு முன்பு, இந்தியாவின் முதல் கையில்லாத வில்லாளியான ஷீத்தல் தேவிக்கு மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரையும், கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கானின் தந்தை நௌஷாத் கானுக்கு அவரது மகனின் வாழ்க்கைக்கு அவர் செய்த பங்களிப்பிற்காக தார் காரையும் பரிசாக அளித்தார். இதற்கிடையில், காஷ் படேல் பிப்ரவரி 21, 2025 அன்று ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) ஒன்பதாவது இயக்குநராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார். பதவியேற்பு விழாவின்போது, படேல் பகவத் கீதையின் மீது கை வைத்து உறுதிமொழி ஏற்றார்.
வாஷிங்டன், டி.சி.,யில் உள்ள வெள்ளை மாளிகை வளாகத்தில் உள்ள ஐசனோவர் நிர்வாக அலுவலக கட்டிடத்தில் (EEOB) இந்திய ஒப்பந்த அறையில் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார். படேலின் நியமனம் ஒரு முக்கியமான மைல்கல்லாகும், ஏனெனில் எஃப்.பி.ஐ-யின் தலைவராக இருக்கும் முதல் இந்திய-அமெரிக்கர் மற்றும் இந்து இவர்.
