31 நாள் குழந்தையின் உயிரைக் காத்த ஆம்புலன்ஸ் டிரைவர்..! 508 கி.மீட்டரை 6.45 மணி நேரத்தில் கடந்து சாதனை..
31 நாள் குழந்தைக்கு இதய அறுவை செய்வதற்காக திருவனந்தபுரம்-கண்ணூர் இடையிலான 508 கி.மீட்டர் தொலைவை 6 மணிநேரம் 45 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் டிரைவர் கடந்துஹீரோவாக ஜொலித்தார்.
வழக்கமாக இந்த தொலைவைக் கடக்க 10 முதல் 14 மணிநேரம் ஆகும் நிலையில், 6.45 மணிநேரத்தில் கடந்தது சாதனையாகும். டிரைவர் தமிம் திறமை, சாமர்த்தியம், கேரள போலீசார், மக்களின் ஒத்துழைப்பு ஆகியவை குழந்தைக்கு அறுவைசிகிச்சை நடக்க உதவியது.
கண்ணூரில் உள்ள பரியாரம் மருத்துவக்கல்லூரியில் பிறந்த 31 நாள் பெண் குழந்தை பாத்திமா லைபா. இந்த குழந்தைக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்து, திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவக்கல்லூரி, தொழில்நுட்ப மையத்துக்கு பரிந்துரைத்தனர். பரியாரம் நகரில் இருந்து திருவனந்தபுரம் செல்ல 500 கி.மீட்டர் தொலைவாகும்.
இதற்காக காசர்கோடு நகரில் இருந்து நல்ல நிலைமையில் ஐ.சி.யு. வசதி கொண்டஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. பரியாரம் நகரில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8.23 மணிக்கு புறப்பட்டது. ஆம்புலன்ஸை தமிம் அன்சாரி என்பவர் ஓட்டினார்.
இந்த திட்டத்தை வெற்றிகரமாக தமிம், போலீசார், பொதுமக்கள் அனைவரும் அளித்த ஒத்துழைப்பு சிறப்பானது. குழந்தையை விரைவாக கொண்டு சேர்க்க ‘குழந்தை பாதுகாப்பு அணி’ என்ற அமைப்பு களத்தில் இறங்கியது. ஆம்புலன்ஸ் செல்லும் ஒவ்வொரு நகரிலும் போலீசாரிடம் கூறி, சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வழிவகை செய்ய கேட்டுக்கொண்டது.
மேலும், சமூக ஊடகங்களான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் ஆகியவற்றிலும் இந்த விஷயத்தை பதவிட்டு, தங்கள் நகருக்குள் வரும் இந்த ஆம்புலன்சுக்கு வழிவிட வேண்டும், நெரிசலை ஏற்படுத்தாதீர்கள் எனவும் கேட்டுக்கொண்டது.
இதற்காக ஒவ்வொரு நகரிலும் போலீசாரும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து, மக்களிடம் ஒத்துழைப்பு கோரினர். இதையடுத்து, ஆம்புலன்ஸக்கு பாதுகாப்பாக ஒரு போலீஸ் வாகனம், இரு இன்னோவா கார்கள் என வரிசையாக அணி வகுத்து ஒவ்வொரு நகரையும் அதிவேகமாக கடந்தன.
குழந்தை பாதுகாப்பு அமைப்பும், ஜி.பி.எஸ். கருவியின் உதவியுடன் ஆம்புலன்ஸ் வரும் பாதையா கண்டறிந்து, சாலையை ஒழுங்கு படுத்தும் பணியில் போலீசாருக்கு உதவியது. மக்களின் ஒத்துழைப்பு, போலீசாரின் உதவி ஆகியவற்றால் இரவு 8.23 மணிக்கு புறப்பட்டஆம்புலன்ஸ் திருவனந்தபுரத்துக்கு நேற்று அதிகாலை 3.23க்கு வந்து சேர்ந்தது. கோழிக்கோட்டில் மட்டும் 20 நிமிடங்கள் உணவுக்காகவும், எரிபொருள் நிரப்பவும் நிறுத்தப்பட்டது. அதிவேகமாக ஆம்புலன்ஸை ஓட்டி குழந்தையை சரியான நேரத்துக்குகொண்டு வந்த சேர்த்த தமிம்மை அனைவரும் பாராட்டினர்.
மருத்துவமனைக்கு குழந்தை கொண்டுவரப்பட்டதும், அடுத்த அரை மணிநேரத்தில் அறுவைசிகிச்சை தொடங்கியது. அறுவை சிகிச்சைக்கு பின் குழந்தை நலமாக இருந்தாலும், இன்னும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.